மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! | Stop This Drama To Launch Mithun, CV Shanmugam Lashes Out At EPS, Blames Him For AIADMK’s Continuous Losses

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

விழுப்புரம்: தனது குடும்பத்தினர் மற்றும் பணம் கொடுப்பாரின் பேச்சை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கேட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததில் இருந்தே, கட்சி தோல்வி அடைந்திருப்பதாக கூறிய சிவி சண்முகம், மிதுன் பழனிசாமியை கட்சிக்குள் கொண்டு வர டிராமா செய்யாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமி அதிமுகவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கேபி முனுசாமி பேசி இருந்தார். இதன் மூலமாக இளைஞர்களை அதிமுக பக்கம் இழுக்க முடியும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர். இந்த தகவல் வெளியாகி அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CV Shanmugam

இந்த நிலையில் சுமார் 3 வாரங்களாக அதிமுக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த சிவி சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் சிவி சண்முகம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்புக்கு வந்தது முதலே அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. வாக்கு சதவிகிதமும் குறைந்து வருகிறது.

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவில் ஒரு சர்வாதிகாரப் போக்குடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார்.

தற்போது எடப்பாடி பழனிசாமி தனது மகனை கட்சிக்குள் கொண்டு வர சில டிராமாவை அரங்கேற்றி வருகிறார். மிதுன் பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. அவரை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் டிராமா செய்யாதீர்கள். அதிமுக தோல்விக்கு இன்று வரை யாருமே பொறுப்பேற்கவில்லை. 47 இடங்களில் வென்றதை பெருமையாக பேசுகிறார்கள்.

அந்த 47 இடங்களில் 31 இடங்கள் பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லையென்றால் வடமாவட்டங்களில் மிகப்பெரிய தோல்வியை அதிமுக அடைந்திருக்கும். சேலம் மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமி தடுமாறி தான் வென்றிருப்பார். அதிமுக தலைமை தவறை திருத்தி கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டிய செயற்குழு கூட்டத்தையாவது கூட்ட வேண்டும்.

தேர்தல் தோல்விக்கு பின் ஜெயலலிதா பாஜக, காங்கிரஸ், மூப்பனார், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்றார். எந்தவித ஈகோவும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கட்சியை சீரமைக்க தொடங்க வேண்டும். எங்களின் ஒரே கோரிக்கை அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *