Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தஞ்சாவூர்: சட்டசபையை சினிமா ஷூட்டிங் போல் ஆளுங்கட்சி மாற்றி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அடுத்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் டான்ஸ் ஆடுவேன் என்று நினைப்பதாக கூறிய உதயநிதி, தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்சாரம் எங்கே என்று மக்கள் தேடி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகியுன் இல்ல விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.. அதள பாதாளத்தில் இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கிறார்கள். இதையெல்லாம் திமுக சார்பாக நாங்கள் அனைவரும் பேசினோம்.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் விஜய், அதற்கு ஒரு பதிலையும் கொடுக்கவில்லை. ஆளுங்கட்சியினர் சட்டசபையில் என்னென்ன கூத்தடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எங்களுக்கெல்லாம் இது சட்டசபையா அல்லது சினிமா தியேட்டரா அல்லது சினிமா ஷூட்டிங்கா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு சட்டசபையின் தரத்தை ஆளுங்கட்சியினர் குறைத்துவிட்டனர்.
எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என்று ஆட்சியாளர்கள் ரெடிமேட் பதிலாக வைத்துள்ளார்கள். திமுக செய்த பணிகளால் நல்லது நடந்தால், அதற்கு இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். அதுவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடனே திமுக காரணம் என்கிறார்கள். திமுக தலைவரை சிறுமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் அப்பாவை காணோம் என்று சட்டசபையில் பேசினார்.
திமுக தலைவர் என்றுமே தேடி பிடிக்கும் இடத்தில் இருந்ததே இல்லை. மிசா காலத்தில் போலீஸ் ஸ்டாலினை கைது செய்ய கோபாலபுரம் வந்தனர். அப்போது கழகப் பணிக்காக வெளியில் சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை, நேராக காவல் நிலையத்திற்கு வர சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தனர் கலைஞர். சொன்னது போல் பணிகள் முடிந்து வீடு திரும்பிய ஸ்டாலினை, காவல் நிலையம் அனுப்பி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக எங்கும் நிறைந்திருக்கிறார் ஸ்டாலின். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் திமுக தலைவர். ஆனால் முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் மக்கள் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மின்சாரத்தை தேடிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை தேடி கொண்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் விஜய் இன்னும் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் டான்ஸ் இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் எங்களின் எதிர்பார்ப்பு.. தமிழ்நாடு ஒரு பேரிடரில் மாட்டிக் கொண்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் பொறுப்பு திமுகவினருக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.