
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாளை வாக்குபதிவு நடைபெற உள்ளது. ஓரே கட்டமாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முதல் பாதுகாப்பு பணிகளில் போலீசாரும் துணை ராணுவத்தினரும் ஈடுபட தொடங்கி விட்டனர்.
சென்னை காவல்துறைக்குட்பட்ட 24 சட்டமன்ற தொகுதிகளில் 198 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக சென்னையில் 26,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் 198 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினருடன் பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 31 கம்பெனிகள் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 7 கம்பெனி மட்டுமே வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.