International
oi-Nantha Kumar R
பெரு: பெரு நாட்டில் சுற்றுலா விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த விமானத்தில் 11 பயணிகள் – 2 பைலட்டுகள் என பயணித்த 13 பேரும் பலியாகினர்.
பெரு நாட்டில் நாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்த சுற்றுலா தலமாக ‘நாஸ்கா லைன்’ என்ற இடம் உள்ளது. இது தொல்லியல் தளமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

பாலைவனப்பகுதியான இங்கு விமானத்தில் பறந்தபடி ‘நாஸ்கா லைன்’ கோடுகளை சுற்றுலா பயணிகள் ரசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த இடத்துக்கு ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் நாஸ்கோ நகரில் இருந்து சுற்றுலா விமானம் ஒன்று புறப்பட்டது. ‘ஏரோடயானா’ என்ற நிறுவனத்தை சேர்ந்த இந்த விமானத்தில் 11 பயணிகள், 2 பைலட்டுகள் என்று மொத்தம் 13 பேர் இருந்தனர்.
இந்த விமானம் பிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து பிய்ப்ளோ விய்ஜோ ஏரியாவில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. விமானம் ரேடாரில் இருந்து விலகியது. உடனடியாக விமானத்தை தேடும் பணி தொடங்கியது. அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியதும், விமானத்தில் பயணித்த 2 பைலட்டுகள், 11 பயணிகள் என்று மொத்தம் 13 பேரும் பலியானதும் தெரியவந்தது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நேற்று முன்தினயம் இந்த பகுதியில் அதிகமான காற்று வீசுவதை காரணம் காட்டி பல்வேறு சுற்றுலா விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
காற்று அதிகமானதால் பைலட்டுகளால் விமானப்பாதையை சரியாக பார்க்க முடியாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் இடமாற்றம் செய்து தரையிறக்கப்பட்டன. இதனால் இந்த கோணம் உள்பட ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.