Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் பாமக கெளரவத் தலைவராக இருந்த ஜிகே மணி ஆகியோர் ராமதாஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளில் இணைய தயாராகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாக சட்டசபைத் தேர்தலில் இரு தரப்பும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. கட்சியின் சீனியர்கள் பலரும் ராமதாஸ் பக்கமும், இளம் தலைமுறையினர் அன்புமணி பக்கமும் இருந்தனர்.

இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அன்புமணி தரப்பு பாமக 4 தொகுதிகளில் வென்றது. ராமதாஸ் அணியினரால் பாமகவின் வெற்றி பல்வேறு தொகுதிகளில் பறிபோனது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இருவருக்கும் இடையிலான மோதல்களும் கருத்து வேறுபாடுகளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
அன்புமணியை பார்த்து ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுதது குடும்பத்தினரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. இதனால் அன்புமணி புதிய தெம்புடன் இருந்து வருகிறார். இருப்பினும் அன்புமணியுடன் ராமதாஸ் இணைந்தது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் அன்புமணி தம்மை மீண்டும் பாமகவில் அங்கீகரிப்பாரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், 1 ஆண்டுக்கு முன் ராமதாஸ், அன்புமணி இணைந்திருந்தால் பாமகவில் பலர் கடனாளியாக மாறி இருக்க மாட்டார்கள். பல கோடி ரூபாய் செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் ராமதாஸ். எங்கள் முடிவை 2 நாளில் அறிவிப்போம் என்று தெரிவித்திருக்கிறார். இதே போன்ற கருத்தை தான் ஜிகே மணியும் கூறியுள்ளார். ஏற்கனவே பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்பட்டது.
தற்போது ராமதாஸ்க்கு எதிராகவே பேசி இருப்பதால், விரைவில் தவெக பக்கம் நகர்வார் என்று தெரிய வந்துள்ளது. இன்னொரு பக்கம் ஜிகே மணி திமுக பக்கம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளுடன் பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதனை பாமக தரப்பு ரசிக்கவில்லை. இதனால் அன்புமணி அவர்களுடன் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.