''சமரச தீர்வைக் காண விரும்புகிறேன்'' – அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் கொடுத்த `ட்விஸ்ட்'

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார்.

மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.

நிதியமைச்சர் மரியவில்சன்
நிதியமைச்சர் மரியவில்சன்

அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் விசாரணைக்காக அமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அவர் ஆஜராகவில்லை.

அதில் கடுப்பான நீதிபதி, “பலமுறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்?” என்று கேட்டதுடன், ஜூலை 10-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தார்.

அதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை புதுச்சேரியில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் மரியவில்சன்.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அத்துடன் இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்குத் தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் மரியவில்சன். அந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் மரியவில்சனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அத்துடன் ஜூலை 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *