இந்த விஷயம், சமூக வலைத்தளப் பக்கங்களில் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார் பேர்லே மானி. அந்தக் காணொளியில் அவர், “நான் பதிவிட்ட விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, நான் நினைக்காத அர்த்தங்கள் அதற்குப் கற்பிக்கப்பட்டன.
நான் இரவு 11 மணிக்குத் தான் அதைப் பதிவிட்டேன். நாம் எதைப் பதிவிட்டாலும் சிலர் நல்ல கோணத்திலும், சிலர் கெட்ட கோணத்திலும் பார்ப்பார்கள். பெரும்பாலானோர் நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டனர்.
ஆனால், சில நிமிடங்களிலேயே நான் கற்பனை கூட செய்து பார்க்காத வகையில் கமெண்ட்டுகள் வரத் தொடங்கின.
நீட் போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோக்களைப் பார்த்த பிறகே நான் அதைப் பதிவிட்டேன். ‘வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று நான் கூறியது, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே தவிர, போராட்டத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள் என்று சொல்வதற்கு நான் யார்?
இயக்குநர் சிபி மலயில் சார் பற்றி நான் ஒருபோதும் அப்படிப் பேசமாட்டேன். அவர் மலையாள சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். நான் அவருடைய தீவிர ரசிகை.
சார், நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. ‘தோல்வியடைந்த இயக்குநர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறென சொல்லவில்லை.
கருத்து தெரிவிக்க அனைவருக்கும் இங்கு உரிமை இருக்கிறது. என்னுடைய பதிவிற்கு பின்னிருக்கும் உண்மையை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த சர்ச்சையினால் பேர்லே மானியின் இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குறைந்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல், பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம்.