ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.
அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே கட்சிக்குள் ஏக அக்கப்போர் என்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி அரசு அலுவலகங்களில் ஆய்வு என்கிற பெயரில் வட்ட, கிளைச் செயலாளர்களின் சேட்டைகள் வரை நீள்கின்றன அவை.
சகஜமாக சர்ச்சைகளில் சிக்குவது, சொந்தக் கட்சியினருடன் பஞ்சாயத்து என்கிற ரீதியில் ஒரு பட்டியல் போட்டால், இன்றைய தேதியில் விருதுநகர் மாவட்ட தவெக-வுக்குதான் முதலிடம்.
ஆமாம், மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய நான்கைக் கைப்பற்றியது கட்சி. மீதமுள்ள சாத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளும் திமுக வசம் சென்றன.
அமைச்சரவை அமைத்தபோது இந்த மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள்… அதுவும் இருவருமே பெண்களாக இருந்தது, மக்கள் மத்தியில் “ஆஹா’ சொல்ல வைத்தது.
ஆனால் அந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமல்ல, மீதமுள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து வென்ற நான்கு பேர் குறித்தும் இந்த மூன்று மாதங்களுக்குள் வந்த புகார்கள், சர்ச்சைகள்…. வாங்க பார்க்கலாம்.!
சர்ச்சையான ரீ….ல்ஸ்!
தொழில் துறை அமைச்சராக 29 வயதில் கீர்த்தனா பதவி ஏற்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு வரும்போதே வெற்றி பெற்ற சான்றிதழைக் கொண்டு வர மறந்தது நினைவிருக்கலாம். அங்கு ஆரம்பித்தது சர்ச்சை.
தொடர்ந்து ரீல்ஸ் போட்டு முதலீட்டாளர்களை அழைத்தது, அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களின் ஆங்கில அறிவைச் சோதித்தது, தன்னுடைய அரசு வாகனத்தை கட்சிக்காரர்கள் பயன்படுத்த அனுமதித்தது என தற்போது வரை நீண்டு கொண்டே போகிறது.
இடையில் கட்சியில் மாவட்டச் செயலாளரை ஓரங்கட்டும் முயற்சியையும் ஒருபுறம் செய்து வருவதாகக் கூறுகிறார்கள் மாவட்ட உட்கட்சி விவரம் அறிந்த சிலர். மாவட்டச் செயலாளருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமாம். இருவரின் பஞ்சாயத்து பனையூர் வரை வந்தாலும் ‘அப்படி இப்படி தான் இருக்கும், நீங்க பாத்து நடந்துகோங்க’ என்பதுதான் அங்கிருந்து வரும் பதிலாக இருக்கிறதாம்.