யார் வாழ வேண்டும்.. யார் சாக வேண்டும்.. AI கைகளுக்கு போகும் அதிகாரம்.. இது ரொம்ப ஆபத்து! | AI in Modern Warfare: How Artificial Intelligence Is now Transforming Battles Across the World

Spread the love

International

oi-Vigneshkumar

லண்டன்: செயற்கை நுண்ணறிவு என்பது இனி வெறுமன சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்ய அல்லது டேட்டா பிராசஸ் செய்ய மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்ல. காசா, உக்ரைன், ஈரான் போர் என உலகின் பல முக்கிய மோதல்களில் ஏஐ பயன்பாடு மிக பெரியளவில் அதிகரித்துவிட்டது. அச்சுறுத்தல்களை ஆய்வு செய்வது தொடங்கி, எங்கே எப்போது தாக்குதல் நடத்தலாம் என முடிவெடுப்பது வரை AI முக்கிய பங்கு வகித்து வருகிறது.

போர் என வரும்போது ஒரு தாக்குதல் முடிவை எடுக்கும் முன்பு பல்வேறு விஷயங்கள் குறித்தும் யோசித்தே முடிவெடுப்பார்கள். ஒரு காலத்தில் பல மணி நேரம் வரை செலவிட்டு எடுத்த ராணுவ முடிவுகள், இன்று சில நொடிகளில் எடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் ஏஐ!

Ai war world

ஏஐ சொல்வதை கேட்டு தாக்குதல்

அதேநேரம் போர்களில் ஏஐ பயன்படுத்தி, அது சொல்லும் இடங்களில் தாக்குதல்களை நடத்தும்போது பல கேள்விகள் வருகிறது. அதாவது ஏஐ சொல்லும் இடங்களில் தாக்குதல் நடத்தும்போது பேரழிவு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதே அந்த கேள்வியாகும். இப்போது உலக நாடுகளின் விவாதம், போரில் AIஐ பயன்படுத்த வேண்டுமா என்பதல்ல. மாறாக, தாக்குதல் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மனிதர்கள் எந்த அளவுக்கு ஏஐயிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே மிக பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

எதிர்கால போர்க்களம் என்பது ட்ரோன்கள், சாட்டிலைட்கள், ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகளை கொண்டதாகவே இருக்கும். மேலும், பல்வேறு இடங்களிலும் இருந்தும் டேட்டா வரும்போது, அதை உடனடியாக மனிதர்களால் ஆய்வு செய்ய முடியாது. இப்போது அந்த வேலையையும் போர்க்களத்தில் AI தான் மேற்கொள்கிறது.

கண்காணிக்கும் ஏஐ

AI மூலம் எதிரியின் நகர்வுகளை வேகமாக கண்டறிய முடியும். மேலும், பாதுகாப்பான ராணுவ பாதைகளை பரிந்துரைக்க முடியும். எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை கூட ஏஐ பரிந்துரைக்கிறது. பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து போர்க்களத்தின் கள நிலவரத்தையும் சில நொடிகளில் ஏஐயால் வழங்க முடியும். அதாவது ஏஐ இந்தளவுக்கு துல்லியமான டேட்டாக்களை கொடுப்பதால் ராணுவ தளபதிகளால் சரியான முடிவை எடுக்க முடிகிறது.

AIயை ராணுவத்தில் பயன்படுத்திய முக்கிய திட்டங்களில் ஒன்று அமெரிக்காவின் Project Maven. இந்த திட்டம் 2017ல் தொடங்கப்பட்டது. ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்த கோடிக்கணக்கான வீடியோக்களை ஆய்வு செய்து, மனிதர்களால் கண்டறிய முடியாத தகவல்களை AI மூலம் கண்டுபிடிப்பதே இதன் பிரதான நோக்கம். ஆனால், இப்போது இது அதையும் தாண்டி பல மடங்கு மிக பெரியளவில் வளர்ந்துள்ளது.

3 வகை

ராணுவம் AIஐ பயன்படுத்தும்போது மூன்று வகையான அணுகுமுறைகள் உள்ளன. முதலில் Human in the Loop. அதாவது தாக்குதல்களை AI பரிந்துரை செய்யும். ஆனால் இறுதி உத்தரவை மனிதர்களே வழங்குவார்கள். அடுத்து Human on the Loop.. இதில் AI பெரும்பாலான முடிவுகளை எடுக்கும். மனிதர்கள் கண்காணிப்பார்கள்; தேவைப்பட்டால் மட்டும் தலையிடுவார்கள். அடுத்து Fully Autonomous Weapons – மனித தலையீடு இல்லாமல் AI தானாகவே இலக்கை தேர்வு செய்து தாக்கும்!

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏஐ டூல்களை பயன்படுத்தினாலும் தாக்குதல் குறித்த இறுதி முடிவை ராணுவ தளபதிகளே எடுப்பார்கள் என கூறுகிறது. இருப்பினும், AI பரிந்துரைகள் வேகமாகவும் நம்பகமாகவும் மாறும்போது, மனிதர்களின் ஒப்புதல் வெறும் சம்பிரதாயமாக மாறிவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

போர் சட்டங்கள்

சர்வதேச போர் சட்டங்களின்படி, போர் காலத்தில் ராணுவ வீரர்களை மட்டுமே தாக்க வேண்டும். பொதுமக்களை தாக்கக்கூடாது. ஆனால் AI இந்த வேறுபாட்டை எப்போதும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருப்பதாலே அவர் ராணுவ வீரர் என்று சொல்ல முடியாது. அவர் வேட்டையாடும் நபராகவோ, விவசாயியாகவோ இருக்கலாம். அதேபோல் ஒரு கட்டிடம் ராணுவ தலைமையகமாகவும் இருக்கலாம்.. பள்ளியாகவும் இருக்கலாம்.

சூழ்நிலை, நோக்கம், நடத்தை ஆகியவற்றை வைத்து முடிவு எடுக்க மனிதர்களால் மட்டுமே முடியும். மறுபுறம் ஏஐ எப்போதும் டேட்டாவை வைத்தும், பேட்டர்ன்களை வைத்தும் மட்டுமே முடிவெடுக்கும். டேட்டா முழுமையற்றதாகவோ அல்லது தவறாகவோ இருந்தால், மிக பெரிய உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே வல்லுநர்களின் கவலையாக இருக்கிறது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலின் போது Project Maven மூலம் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தவறுதலாக ஒரு பள்ளி மீதும் தாக்குதல் நடத்தப்ப்பட்டது. பழைய சாட்டிலைட் தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாலேயே டார்கெட் மிஸ்ஸாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் இது ஏஐ உருவாக்கும் ஆபத்தையே காட்டுகிறது.

யார் பொறுப்பு

இப்போது பலரிடமும் இருக்கும் கேள்வி AI தவறு செய்தால் யார் பொறுப்பு என்பதாகும். AI பரிந்துரைத்த டார்கெட் பின்னர் தவறானது என தெரிய வந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்.. தாக்குதலுக்கு அனுமதி அளித்த தளபதியா? AIயை நம்பிய ராணுவ அதிகாரியா? அந்த ஏஐயை உருவாக்கிய நிறுவனமா? அல்லது அதை பயன்படுத்திய அரசா? இதற்கெல்லாம் இன்னும் தெளிவான பதில் இல்லை என்பதே கசப்பான உண்மை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *