Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தூத்துக்குடி: மடப்புரம் அஜித்குமார் லாக் அப் மரணத்தின் போது, Sorry வேண்டாம்.. நீதி வேண்டும் என்றவர், இன்று ஒரு Sorry கூட சொல்லவில்லை என்று திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, தவெகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சி அமைத்து கடந்த 5 வாரங்களில் 4 லாக் அப் மரணங்கள் அரங்கேறி இருக்கின்றன. ஏற்கனவே நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் லாக் அப் மரணம் அடைந்தது பேசுபொருளாகியது. தற்போது தூத்துக்குடி காவல் நிலையத்தில் அருணாச்சலம் லாக் அப்பில் மரணம் அடைந்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெகவினரால் லிங்ககுமார் தாக்கப்பட்டார்.

இவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், லிங்ககுமார் என்பவர் அவரின் இடத்தில் கட்டியுள்ள கடையை இடிக்க வேண்டும் என்றும், அவரின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் தாஸ் என்பவர் தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
காவல்துறையினரிடமும் புகார் அளிக்க முயற்சித்துள்ளார். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. தற்போது தாஸ் என்ற வழக்கறிஞர் பல பேருடன் வந்து கடையை இடித்துள்ளார். அதனை தடுக்க முயன்ற லிங்ககுமார், அவரது மனைவி, 16 வயது மகன் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதன் எஃப்ஐஆரில் யார் தாக்கினார்களே என்பதே இல்லை.
துப்பாக்கியுடன் வந்து மிரட்டியதாக சொல்கிறார்கள். அதுவும் கூட எஃப்ஐஆரில் பதிவு செய்யப்படவில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றம் என்றுதான் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் நியாயமாக எஃப்ஐஆர் கூட பதிவாகவில்லை. தாஸ் என்பவர் தவெகவை சேர்ந்தவர். இதனால் காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை.
அதேபோல் லாக் அப் மரணம் அடைந்த அருணாச்சலம் குடும்பத்தனை சந்தித்தோம். அந்த பிரச்சனையும் குடும்பத்தினருக்கு கூட என்ன நடந்தது என்றே தெரியவில்லை. லாக் அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பழிவாங்கும் நோக்கில் போலீசார் மிரட்டி வருகின்றனர். பயத்தோடு அவர்களின் குடும்பம் வசித்து வருகிறது.
காவல்துறையை நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு, காவல்துறை என்று ஒன்று இருக்கா.. அல்லது 70 நாட்களில் சிலருக்கு மட்டுமே சாதகமாக செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட்டதா? ஒருநாளில் எத்தனை குற்றங்கள் நடக்கும் என்று கணக்கு வழக்கு இல்லாத சூழல் தான் இருக்கிறது. இதற்கும் அமைதியே பதிலாக கிடைக்கும்.
அஜித்குமார் லாக் அப் மரணத்தின் போது சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றவர்.. ஒரு சாரி கூட சொல்லவில்லை.. அஜித்குமார் மரணத்தின் போது ஸ்டாலின் நேரடியாக அமைச்சரவை அனுப்பி மன்னிப்பு கேட்டார்.. ஆறுதல் கூறினார். ஆனால் இன்று லாக் அப் மரணம் பற்றி ஒரு பதில் கூட இல்லை என்று தெரிவித்தார்.