Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க சில பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளதாகவும், இறுதி முடிவை தோனி மற்றும் புதிய பயிற்சியாளர் சேர்ந்து எடுப்பார்கள் என்றும் சோசியல் மீடியாவில் பேச்சுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி கடைசியாக ஆடிய 3 ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 2023ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி சரிவை நோக்கி பயணப்பட்டு வருவதாகவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதில் 2 சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அதிலும் கடந்த சீசனில் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ருதுராஜ் கெய்க்வாட் செய்த குழப்பங்கள் பலரின் அமைதியையும் சோதிக்க வைத்தது. பவுலிங் மாற்றங்களில் ருதுராஜ் கெய்க்வாட் மிகப்பெரிய எழுச்சியை பெற்றிருந்தாலும், பிளேயிங் லெவனில் இன்னும் தீவிரமாக முடிவுகளை எடுக்க தயாராகவில்லை என்றே பார்க்கப்படுகிறது. தற்போது துலீப் டிராபியில் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்த தொடங்கி இருந்தார்.
துலீப் டிராபிக்கு முன்பாக சிஎஸ்கே அணிக்கு சொந்தமாக நாவலூரில் உள்ள மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தோனியும் சிஎஸ்கே அணி நிர்வாகிகளை சந்தித்திருந்தார். இதன்பின் சிஎஸ்கே நிர்வாகம், தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையில் சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி தொடர்பாகவும் சில ஆலோசனைகள் நடந்துள்ளன.
கேப்டன்சியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை விடுவிக்கலாமா என்றும் சில பேச்சுகள் எழுந்திருக்கின்றன. ருதுராஜ் கெய்க்வாட் இடத்தில் சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்கலாம் என்று சில ஆலோசனைகள் நடந்திருக்கின்றன. ஆனால் சிஎஸ்கே தரப்புக்கு நெருக்கமானவர்கள் பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் இருந்து நீக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சஞ்சு சாம்சனின் ஃபிட்னஸ் டிரெய்னராக இருக்கும் ராஜாமணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கமெண்ட் காரணமாகவே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீதான விவாதம் தொடங்கியதாக தெரிய வந்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சனின் பிஆர் நிறுவனம் அவரை சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க சில தகவல்களை கசியவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.