மும்பை சின்ச்போக்லி சிந்தாமணி விநாயகர் விழா: தென்னிந்திய கோயில் கட்டிடக்கலை தீம்- பிரம்மாண்ட ஏற்பாடு | Mumbai’s Iconic Chinchpokli Cha Chintamani ganesh festival With Grand South Indian Temple Theme

Spread the love

India

oi-Vignesh Selvaraj

மும்பை: மும்பையின் புகழ்பெற்ற சின்ச்போக்லி சர்வஜனிக் உத்சவ் மண்டல் சார்பில் நடைபெறும் ‘சின்ச்போக்லி சா சிந்தாமணி’ விநாயகர் சதுர்த்தி விழாவின் 107-வது ஆண்டு விழாவுக்கான ‘ஆக்மன் சோஹ்லா’ எனப்படும் விநாயகர் வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மும்பையின் லால்பாக், பரேல், கிராங்காவ் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டோல்-தாஷா இசை முழங்க, “சின்ச்போக்லி சிந்தாமணி சா விஜய் அசோ” என்ற முழக்கங்கள் ஒலிக்க, சிந்தாமணி விநாயகர் பக்தர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.

Mumbai s Iconic Chinchpokli Cha Chintamani ganesh festival With Grand South Indian Temple Theme

மும்பை விநாயகர்

மும்பையின் இரண்டாவது பழமையான பொது விநாயகர் மண்டலங்களில் ஒன்றான சின்ச்போக்லி சர்வஜனிக் உத்சவ் மண்டல், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருள்களுடன் விநாயகர் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தென்னிந்திய கோயில்களின் கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு விழா அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான சிந்தாமணி விநாயகர் சிலை, திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பாலாஜியை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கருடன், கீர்த்திமுகம், சங்கு, சக்கரம் மற்றும் கற்பூரத் திலகம் உள்ளிட்ட பாரம்பரிய ஆன்மிக அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.

விநாயகர் சிலையைச் சுற்றியுள்ள பந்தலும் தென்னிந்திய கோயில் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் புவனகிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலின் (ஸ்வர்ணகிரி) கட்டிடக்கலை சிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு பந்தல் உருவாக்கப்பட்டுள்ளது.

உயரமான கோபுரங்கள், புனித தீபஸ்தம்பங்கள் மற்றும் யாளி வடிவிலான காவல் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய அம்சங்கள் பந்தலில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் தென்னிந்திய கோயில்களின் பிரம்மாண்டமான தோற்றத்தை பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகள் மிகுந்த படைப்பாற்றலுடன் திட்டமிடப்பட்டதாக சின்ச்போக்லி சர்வஜனிக் உத்சவ் மண்டல் தலைவர் ராஜேந்திர திச்சோல்கர் தெரிவித்துள்ளார். திறமையான கலைஞர்கள், கைவினை நிபுணர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு கருப்பொருள் பக்தர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெறும் என்றும், சிந்தாமணி விநாயகரின் அருளைப் பெற வரும் பக்தர்களுக்கு இது மகிழ்ச்சியையும் சிறப்பு அனுபவத்தையும் வழங்கும் என்றும் மண்டல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

1920-ல் தொடங்கிய பாரம்பரியம்

சின்ச்போக்லி சர்வஜனிக் உத்சவ் மண்டல் 1920 ஆம் ஆண்டு மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜவுளித் தொழில் மையப் பகுதியில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து மும்பையின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக இந்த மண்டல் இருந்து வருகிறது.

கிராங்காவ் பகுதியின் உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக ஒற்றுமையுடன் இந்த மண்டலின் பாரம்பரியம் நெருக்கமாக இணைந்துள்ளது. சின்ச்போக்லி சிந்தாமணி விநாயகர், சமூக ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக தொடர்ந்து விளங்கி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘ஆக்மன் சோஹ்லா’ நிகழ்ச்சியில் நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான விழா ஏற்பாடுகளில் அதானி குழுமமும் மண்டலுடன் இணைந்து செயல்படுகிறது. விநாயகர் திருவிழா இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், விழா நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

தென்னிந்திய கோயில் கட்டிடக்கலையை மையமாகக் கொண்ட இந்த ஆண்டின் அலங்காரம் மற்றும் கலை வடிவமைப்பு, சின்ச்போக்லி சிந்தாமணி விநாயகர் விழாவின் முக்கிய அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *