தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முதலமைச்சர் விஜய்யால், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய பிரிவு மிக உத்வேகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பெண் அதிரடிப்படையின் பொறுப்பாளரான ஐ.ஜி பவானீஸ்வரி, இந்த படை ஒரு “Dedicative Force” மட்டுமல்லாமல், “Preventive and Proactive Force” ஆகவும் செயல்படும் என்று விளக்கினார். அதாவது, ஒரு குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு ₹357 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், அதிரடிப்படைக்காகவே பிரத்யேகமாக காவல்துறையில் 2,545 புதிய காவலர் பணியிடங்களை உருவாக்கி, மாநிலம் முழுவதும் 270 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
முதற்கட்டமாக, பெண்கள் அதிகமாக நடமாடும் மற்றும் பணிபுரியும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிரடிப்படையினர் நேரடியாகச் சென்று பெண்களுடன் கலந்துரையாடுவார்கள். அவர்களிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு குறித்த தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், ஏற்கெனவே குற்றங்கள் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.