நாள் – 2
21 – 30 வயது வரை மிக முக்கிய காலக்கட்டம். அந்த நேரத்தில் எமெர்ஜென்சி ஃபண்டுடன் இன்னும் சில நிதி விஷயங்களையும் 30 வயதிற்குள் தொடங்க வேண்டுமாம்.
அவற்றைக் குறித்து நமக்கு விரிவாகக் கூறுகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
“30 வயதிற்குள் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டைத் தொடங்கிவிட வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது நமக்குப் பிறகு நம் குடும்பத்திற்கு ஓடி வந்து உதவும் நிதி.

மருத்துவக் காப்பீடு என்பது நாம் உட்பட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உடல்நிலை கோளாறுகளின் போது உதவும் நிதி.
மருத்துவக் காப்பீட்டில் அம்மா, அப்பாவை சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம். நம்முடைய இந்தக் காலகட்டத்தில் அம்மா, அப்பாவிற்கு வயதாகி இருக்கும்.
அவர்களுக்கு அப்போது உடல்நிலை கோளாறு வருவது இயல்பே.
அது வந்த பின், ‘செலவுக்கு பணம் இல்லையே’ என்று தவிப்பதை தவிர்க்கவும், ‘கடன் வாங்குவதை’ தவிர்க்கவும் அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துவிடுவது நல்லது.
மருத்துவக் காப்பீடு
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எடுக்க முடியவில்லை என்றாலும், ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் எடுத்துவிடுவது நல்லது.
அலுவலகங்களில் நமக்கு தனி மருத்துவக் காப்பீடு கொடுத்தாலும், வெளியில் கட்டாயம் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துவிட வேண்டும்.
30 வயதிற்குள் காப்பீடு கட்டாயம் எடுத்துவிட வேண்டும் என்று சொல்வதற்குப் பின்னால், அதற்குள் எடுத்துவிட்டால் பிரீமியம் தொகை குறையும் என்பது முக்கிய காரணம்.

தனியாரில் மருத்துவக் காப்பீடு எடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மாநில அரசு, மத்திய அரசு என இரண்டும் பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கின்றன.
அதிலாவது காப்பீட்டை தொடங்க வேண்டும்.
தங்கம் எவ்வளவு, எதில் எவ்வளவு முதலீடு என்று இப்போதே அசட் அலோகேஷனைத் தொடங்கிவிட வேண்டும்.
SIP, PPF, NPS ஆகியவற்றையும் 25 வயதிற்குள் தொடங்குகள். ஒவ்வொரு வருசமும் இவற்றை ஸ்டெப் அப் செய்யுங்கள்.
முடிந்தளவு பெரும்பாலான கடனை 30 வயதிற்குள் முடித்துவிடுங்கள்.
30 வயதிற்குள் இவ்வளவற்றையும் செய்துவிடுங்கள் என்று கூறுவதற்கு காரணம் – மனிதன் வாழ்க்கையில் 21 – 30 வயதைக் ‘கோல்டன் காலம்’ என்றே கூறலாம்.
எவ்வளவு சின்ன வயதில் முதலீடு, சேமிப்பைத் தொடங்குகிறோமோ, அந்த அளவிற்கும் நமக்கு தேவைப்படும் காலத்தில் அதிக பணம்… லாபம் கையில் கிடைக்கும்.
சின்ன கல்லு… பெத்த லாபம் மக்களே“.