“பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்திருந்த ‘ஆடி மாத பாவங்கள்’ காணொளியில் இருந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் சர்ச்சையாகியிருந்தது.
தற்போது அக்காட்சியை மட்டும் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் டீம் அந்தக் காணொளியில் இருந்து நீக்கியிருக்கிறது.
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது, அவருடைய மகன் சஞ்சய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அவரை கேலி செய்யும் வகையில், இந்த ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் கண்டெண்ட் இருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “தன் தந்தைக்கு எதிராக நடந்த ஒரு சட்டவிரோதமான செயலுக்குப் பிறகு, தன் வேதனையை வெளிப்படுத்த முயலும் ஒரு சிறுவனை, பரிதாபங்கள் யூடியூப் சேனல் கிண்டல் செய்திருப்பதைப் பார்ப்பதற்கு அருவருப்பாய் இருக்கிறது.
திறமையான கலைஞர்களைக் கொண்ட இந்தக் குழுவின் மிகப்பெரிய ரசிகனாக நான் இருந்திருக்கிறேன்.
ஆனால், ஒரு சிறுவன் வேதனையில் இருக்கும் இந்தச் சமயத்தில் அவனை இப்படிக் கேலி செய்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த அருவருப்பாக இருக்கிறது. இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.