Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இடதுகை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகி இருக்கும் சூழலில், ருதுராஜ் சேர்க்கப்படுவதற்கான சூழல் அமைந்திருக்கிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி வீரர்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது குறித்து சிந்திக்கவே முடியும்.

இதனை உணர்ந்து கொண்டுள்ள கேப்டன் சுப்மன் கில் இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். ஆனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக விலகிய சூழலில், தற்போது சாய் சுதர்சனும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதும் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சாய் சுதர்சனுக்கான மாற்று வீரரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இலங்கை ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் சிறப்பாக இல்லையென்றாலும் கூட, அவர் நீண்ட காலமாக இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணித்த போதே ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
திடீரென ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்ததால், அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பின் இந்திய ஒருநாள் அணிக்காக வாய்ப்பு கிடைத்த போது ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்காக பிசிசிஐ கதவுகள் திறக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

