International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எச்சரிக்கை வந்து சில நொடிகளில் பேரழிவு ஏற்பட்டதாகவும் மகனும் மனைவியும் கண் முன்னே அடித்து செல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
நேபாள திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக பல கிராமங்களே அடையாளம் தெரியாத அளவுக்கு அழிந்துள்ளன.

மிக பெரிய வெள்ளம்
நேபாளத்தின் பாட்டே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், ராசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளம் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஏற்பட்டதாகவும் திடீரென தாக்கியதால் பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறை சரிவு
வெள்ளம் ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், பனிப்பாறை சரிந்து விழுந்ததால் பாட்டே கோசி ஆற்றின் கிளை நதியான ல்ஹெண்டே ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டிருக்கலாம். இதனால் திடீரென அதிக அளவு தண்ணீர் தேங்கி, பின்னர் அந்த தடுப்பு உடைந்தபோது மிக பெரிய அளவில் தண்ணீர் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
நேபாளம் திபெத் எல்லையில் உள்ள ராசுவாகதி அருகே இருக்கும் திமுரே பகுதியையே இந்த வெள்ளம் முதலில் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து சில நிமிடங்களிலேயே வெள்ளம் கீழ்நோக்கி பாய்ந்து, ராசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளை அடித்து சென்றுள்ளது. வெள்ளநீர் பெரும்பாலான பகுதிகளில் தற்போது வடிந்துவிட்டாலும், அதன் பாதிப்பு அப்படியே உள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள் பல மீட்டர் உயரத்துக்குக் குவிந்த சேற்றில் புதைந்துள்ளன.
மனைவி மகன் மாயம்
இந்த திடீர் வெள்ளம் எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பது குறித்த விவரங்களை திரிசூலி மார்க்கெட்டில் துணிக்கடை நடத்தி வந்த ஒருவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர், “காலையில் அதிகாரிகள் வந்தனர். திபெத் பகுதியில் பாட்டே கோசி ஆற்றின் மீது இருந்த அணை உடைந்துவிட்டதாகவும், அதிகளவில் தண்ணீர் நம்மை நோக்கி வருவதாகவும் தெரிவித்தனர். நாங்கள் உடனடியாக உயரமான பகுதிகளை நோக்கி ஓடினோம். ஆனால், சிலரால் மட்டுமே சரியான நேரத்தில் அங்கு செல்ல முடிந்தது. சில நொடிகளில் வெள்ளம் பலரை அடித்து சென்றது. இந்த சம்பவத்தில் எனது 18 வயது மகனும் மனைவியும் காணாமல் போனார்கள்” என்றார்.
புகை போல சூழ்ந்த தண்ணீர்
பொதுமக்கள் மேலும் கூறுகையில், “வெள்ளம் ஏற்பட்ட அன்று அந்த பகுதியில் மழை எதுவும் பெய்யவில்லை. மக்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெள்ளம் பாய்ந்து வந்தது. முதலில் நிலம் அதிர்வு போல இருந்தது. உடனடியாக வெளியே வந்து பார்த்தோம். மிக பெரிய புகை போல சேறு கலந்த தண்ணீர் எங்களை நோக்கி வந்தது. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அலையை போல் வந்த தாக்கிவிட்டது. சில நொடிகளில் பல இடங்களில் மொத்தமாக மாயமானது” என்றார்.


