ரயில்களை தேவையில்லாமல் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. ஆனால் சில நேரங்களில் தொழில் நுட்ப காரணங்களுக்காக ரயில் சில இடங்களில் நிறுத்தப்படுவதுண்டு. ஆனால் மத்திய பிரதேசத்தில் ரயில் டிரைவர்கள் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர்-மவூ இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராவ் பகுதியில் உள்ள ரங்வாசா சாலை ரயில்வே கேட்க்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரயில் நின்றதும், அங்கிருந்த கடையில் இருந்து ஒருவர் இரண்டு பொட்டலங்களில் சமோசாக்களை ரயில் டிரைவரிடம் கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடிக்கடி இந்த இடத்தில் ரயில் நிறுத்தப்படுவதாகவும், ரயில் டிரைவர் சென்று சமோசா வாங்கி வருவதாகவும், இதனால் 10 நிமிடத்திற்கும் மேல் ரயில் தாமதம் அடைவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் குமார் இது குறித்து அளித்த பேட்டியில்,”‘எந்தவொரு செயல்பாட்டுத் தேவையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட காரணமோ இன்றி ரயில் நிறுத்தப்பட்டு, லோகோ பைலட் தனது தனிப்பட்ட வேலைக்காக கேபினை விட்டு வெளியேறியது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், ரயில்வே விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ராவ் ஹோம் சிக்னலில் திட்டமிடப்பட்ட பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே அந்தச் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. உணவு வாங்குவதற்காக அது நிறுத்தப்படவில்லை,” என்று ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோ, இந்தூர்-மவூ பயணிகள் ரயிலுடன் (Passenger DEMU) தவறாக இணைக்கப்பட்டுப் பரப்பப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து எடிட் செய்து, தவறான தகவலை உருவாக்கியுள்ளனர் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.