சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

Spread the love

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், `கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் பகுதியில் வசித்து வந்த வெண்ணிலா என்பவர் மீது புகார் ஒன்றை அளித்திருந்தோம். வெண்ணிலா‌, தனது ஒரே மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

நகையை மீட்டுத்தர புகார்

அந்த வழக்கிலிருந்து தனது மகனை மீட்க வேண்டும் என எங்களிடம் பண உதவி கேட்டார். வெண்ணிலா நன்கு தெரிந்தவர் என்பதால், எங்களிடம் இருந்த நகையை கொடுத்து உதவினோம். மாரியம்மன் கோவிலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாங்கள் கொடுத்த சுமார் 30 சவரன் நகையை அடகு வைத்து பணம் எடுத்து கொண்டார். சில தினங்களில் நகையை கொடுத்து விடுவதாக சொன்னதால் நாங்களும் நம்பி கொடுத்தோம்.

இந்நிலையில், வெண்ணிலா அடகு வைத்த பணத்துடன் பூண்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இருவர் குறித்த தகவலும் இல்லை. இப்படியான சூழலில் தான் நாங்கள் வெண்ணிலா குறித்து புகார் அளித்திருந்தோம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு கோயமுத்தூர் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக மோகன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் வெண்ணிலாவுடன் தலைமறைவான மோகன்ராஜ் என்பதும், இருவரும் திருமணம் மீறிய உறவில் வசித்து வந்ததும் சூலூர் காவல்துறையினர் மூலம் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தற்போது மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு விட்டார். எனவே கடந்த ஆண்டு கொடுத்த புகார் மனு மற்றும் இன்று வழங்கிய புகாரின் அடிப்படையில் கோவை சூலூரில் பதுங்கியுள்ள வெண்ணிலாவிடம் இருந்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும். மேலும் எங்களை ஏமாற்றிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *