நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து இருப்பதோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளரும், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.பி. கந்தவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பளிக்காவிட்டாலும், கட்சி வேட்பாளர் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தேன். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடக்கின்ற நிகழ்வுகள்களினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி வழிதெரியாமல் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.
தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களின் பாதைக்கு கழகம் ஒருபோதும் திரும்ப போவதில்லை. எனவே பெரும் மன அழுத்தத்துடனும் வேதனையுடனும் கட்சி தொண்டர்களுக்கு கண்ணிர் மல்க நன்றி தெரிவித்து, கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

’செங்கோட்டையன் வேண்டுகோள்’
இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் வி.பி. கந்தவேல் த.வெ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் தெளிவான தொலைநோக்கு பார்வையும், மாற்றத்திற்கான உறுதியான அரசியல் அணுகுமுறையும் என்னை பெரிதும் ஈர்த்துள்ளது. செங்கோட்டையனின் அன்பான வேண்டுகோளை ஏற்றும், என் ஊராட்சி மற்றும் ஒன்றிய மக்களின் விருப்பத்தையும் உணர்வுகளையும் மதித்து, த.வெ.க-வில் இணைந்துள்ளேன். நான் ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்தில் கடைப்பிடித்த நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் தொடர்ந்து நிலைநிறுத்தி, இனி மக்கள் சேவையை மேலும் தீவிரமாக மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.