தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தவெக.
தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது.
அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எந்த அறிவிப்பையும் தெரிவிக்காமல் சென்ற காங்கிரஸ் கட்சியை திமுக கடுமையாகச் சாடியிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ” தவெக-வைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இத்தனை சீட்டுகள் வெல்லும் என்பதை நானே தவறாகத்தான் கணித்தேன். நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும். ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது. ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது எனச் சொல்வது பொருத்தமற்றது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு நற்பெயர் உள்ளது. இந்தத் தேர்தலில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு விஜய்க்கு நற்பெயர் இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
அவரது செயல்பாட்டைப் பொறுத்து அந்த நற்பெயர் எப்படி வளரும் என்று பார்க்க வேண்டும். தவெக என்பது பிரதான அரசியல் கட்சியாக தமிழகத்தில் இருக்கும். அதேபோல், திமுகவும் பிரதான அரசியல் கட்சியாக இருக்கும்.
திமுகவைக் குறைத்து மதிப்பிட்டால் அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதிமுகவும் பாஜகவும் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளன” என்று பேசியிருக்கிறார்.