Business
oi-Vigneshkumar
சென்னை: இந்த காலத்தில் பலருக்கும் சொந்த வீடு தான் கனவாக இருக்கிறது என்றால் வாடகை வீடுமே கூட இப்போது பலருக்கும் சிக்கலை கொடுத்து வருகிறது. விரும்பிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடியாமல் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்கு என்ன காரணம். சுமார் ரூ.1.26 லட்சம் கோடி இதில் சிக்கி தவிப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
வீடு வாடகைக்கு எடுக்கும் போது வாடகை எவ்வளவு என்பது தான் நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்வி. ஆனால், இந்த காலத்தில் உண்மையில் வாடகையை விட பெரிய நிதிச் சுமையாக மாறி வருவது ‘செக்யூரிட்டி டெபாசிட்’ எனப்படும் முன்பணம் தான். இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் வீடு வாடகைக்கு செல்லும் முன்பே பல மாத வாடகைக்கு சமமான தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

ரூ.1.26 லட்சம் கோடி
இதனால் லட்சக்கணக்கான ரூபாய்கள் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் முடங்கி கிடக்கின்றன. இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை நோ-புரோக்கர் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களில் மட்டும் ரூ.1,26,042 கோடி பணம் டெபாசிட் என்ற பெயரில் வீட்டு உரிமையாளர்களிடம் சிக்கிக் கிடக்கிறது. இந்த தொகையானது சில மாநிலங்கள் ஓராண்டிற்கு செலவிடும் உள்கட்டமைப்பு பட்ஜெட்டை விட அதிகமாகும்.
இதில் ஆறு நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.41,156 கோடி பணம் டெபாசிட் என முடங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ரூ.41,156 கோடி முடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து ஐடி தலைநகரான பெங்களூரில் ரூ.31,628 கோடியும் தேசிய தலைநகரான டெல்லி NCRல் ரூ.24,054 கோடியும் முடங்கியுள்ளது.
சென்னை எங்கே
தொடர்ந்து சென்னையில் ரூ.17,346 கோடி முடங்கியுள்ள நிலையில், ஹைதராபாத்தில் ரூ.6,843 கோடி மற்றும் புனேவில் ரூ.5,015 கோடி முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு வீடு தேடுவோருக்கு இந்த டெபாசிட் என்பதே மிக பெரிய நிதி சுமையாக மாறியிருப்பதையே இது காட்டுகிறது. வீட்டு வாடகை அதிகரிப்பது பற்றி கவலைப்படும் நாம்.. வீட்டிற்குள் நுழையும் முன்பே செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை அதிகமாக இருப்பது பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.. இதனால் பலரும் சிரமத்தையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அதில் பெங்களூர்வாசிகள் தான் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்களாம். அங்கு சுமார் 75 சதவீதம் பேர் அதிக டெபாசிட் காரணமாக தங்களுக்கு பிடித்த வீட்டை வாடகைக்கு எடுக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளனர். பலர் இடம், வசதி, வீட்டு அளவு போன்றவற்றில் சமரசம் செய்ய வேண்டியதாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். அதிக டெபாசிட் செலுத்துவதை விட மாதாந்திர வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்பதே பெங்களூர்வாசிகளின் மனநிலையாக உள்ளது.
சென்னை நிலைமை மோசம்
டெபாசிட் செலுத்துவது மட்டுமல்ல.. வீட்டை காலி செய்த பிறகு அந்த பணத்தை முழுமையாக திரும்ப பெறுவதும் பலருக்கு சவாலாக உள்ளது. குறிப்பாக சென்னை தான் இதில் மோசமாக இருக்கிறது. சென்னையில் சுமார் 11 சதவீதம் பேர், தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். பெயிண்டிங், பராமரிப்பு செலவு, பழுது பார்த்தல், தேய்மானம் போன்ற காரணங்களைக் கூறி வீட்டு உரிமையாளர்கள் பணத்தை தராமல் பிரச்சனை செய்வதாக கூறியுள்ளனர்.
பலன் கிடைத்திருக்கும்
இந்த ரூ.1.26 லட்சம் கோடி தொகை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை அல்லது பிற சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் அது பல குடும்பங்களுக்கு மிக பெரிய பலனை கொடுத்திருக்கும். ஆனால், இப்போது அது டெபாசிட் என்ற பெயரில் முடங்கி போய் இருக்கிறது. இதை சிக்கலை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.


