சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

Spread the love

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துமாரியம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், முத்துமாரியம்மாளின் முதல் கணவரின் வீட்டில் இருக்கிறார்கள். சரண்ராஜும், முத்துமாரியம்மாளும் கொளத்தூரில் வசித்து வந்த நிலையில் சரண்ராஜ், மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

முத்துமாரியம்மாள்

இந்த நிலையில் நேற்று இரவும் (ஆகஸ்ட் 31-ம் தேதி) மது அருந்திவிட்டு சரண்ராஜ் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ், சமையலறையில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவி முத்துமாரியம்மாளை குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முத்துமாரியம்மாள், மயங்கி விழுந்தார். அதனால் பதறிப் போன சரண்ராஜ், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முத்துமாரியம்மாளை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

saranraj

இதையடுத்து முத்துமாரியம்மாளின் உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததால், கொளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூர் போலீஸார், முத்துமாரியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துமாரியம்மாள் எப்படி இறந்தார் என்று சரண்ராஜிடம் போலீஸார் விசாரித்தபோது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாக போதையில் உளறியிருக்கிறார். போதை தெளிந்த பிறகு அவரிடம் மீண்டும் விசாரித்தபோதுதான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சரண்ராஜை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *