Pradeep Antony: "நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன்!" – பிரதீப் ஆண்டனி பதிவு

Spread the love

‘வாழ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம்.

இவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இத்தம்பதிக்குக் குழந்தையும் பிறந்திருந்தது.

இந்நிலையில், தன்னுடைய திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாகப் பிரதீப், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பிரதீப்
பிரதீப்

அந்தப் பதிவில் அவர், “என் நண்பர்களிடம் இந்தக் குழந்தையை விற்றுவிடலாம் என்று நான் பலமுறை விளையாட்டாகப் பேசியிருக்கிறேன். ஒரு குழந்தையைப் பொறுப்போடு வளர்க்கும் அளவுக்கு நான் பக்குவமில்லாதவன் என்று நினைத்தேன்.

அதனால் பூஜா கர்ப்பமானபோது, பிறக்கப்போகும் குழந்தையை வாங்க முன்பதிவு செய்துகொள்ளுமாறும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் தருமாறும் பலரிடம் கேட்டேன். ஆனால் அந்தக் குழந்தை இந்த உலகத்திற்கு வந்த பிறகு, எனக்கு அதன் மீது ஒருவிதப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.

அது நான் சொல்வதை மகிழ்ச்சியோடு கேட்கும். என் கைகளில் ஒரு உயிர் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை உணரும்போது ஒவ்வொரு நாளும் எனக்குப் புதிதாக இருக்கும். ஆனால் இப்போது என் குழந்தை என்னிடம் இல்லை. அந்தக் குழந்தையுடன் நான் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணம் அதுதான்.

அது நடந்து ஒரு மாதம் ஆகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே நான் அந்தக் குழந்தையை விட்டுக்கொடுத்துவிட்டேன். ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க வேண்டும், சிறந்த அப்பாவாக இருக்க வேண்டும், நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நல்ல சூழலை என் குழந்தைக்குத் தர வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன்.

ஆனால் அதில் தோற்றுவிட்டேன். நான் ஒரு தவறு செய்துவிட்டேன். நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்; அதுதான் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை ஒரு மோசமான மனிதனாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

என் உலகத்தின் பகுதியாக இல்லாத, அதை என்றைக்குமே புரிந்துகொள்ளாத அல்லது அதில் ஒரு அங்கமாக இருக்க முயற்சி செய்யாத ஒருவருக்குப் பக்கத்தில்தான் நான் தினமும் காலையில் விழித்தெழுந்தேன்.

அவள் இன்னும் தன் சொந்தக் குடும்பத்தோடும் வாழ்க்கையோடுமே தேங்கிப்போயிருந்தாள். ஒவ்வொரு நாளும் நான் ஒருவரின் வாழ்க்கையை அழிப்பது போல உணர்ந்தேன்.

மற்றொரு நபருடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இரண்டு மாறுபட்ட துருவங்கள் தினமும் மோதிக்கொண்டு, அவர்கள் இயல்பாக இருப்பதற்காகவே ஒருவரை ஒருவர் வெறுப்பது போல இருந்தது.

அது எங்கள் இருவருக்குமே அநீதியாகத் தோன்றியது. எனது முந்தைய உறவால் நான் பலவீனமாக இருந்தேன்.

அந்தப் பலவீனமான தருணத்தில் எங்கிருந்து அன்பைப் பெற முடியுமோ அதைப் பிடித்துக்கொண்டேன். இந்த நிமிடம் வரை அதற்கு உண்மையாகவும் இருந்திருக்கிறேன்.

ஆனால் அது எனக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. என்னுடைய பலவீனமும் அன்புக்காக நான் ஏங்கியதும். இந்தத் திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்ல நான் முடிவெடுத்துவிட்டேன்.

ஏனென்றால் இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. அதோடு அவளும் இனி என்னை நேசிக்கிறாள் என்று நான் நினைக்கவில்லை.

எது எப்படியோ, இன்று நான் அந்தக் குழந்தையை மிகவும் நினைத்துப் பார்த்தேன். அதற்கு ஒரு பெயர்கூட என்னால் வைக்க முடியவில்லையே.

இப்போது என் உணர்வுகளைப் பொதுவெளியில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது குறித்து எனக்கு வரிசையாக அழைப்புகள் வரும்.

என் உணர்வுகளை வெளிப்படுத்தவிடாமல் என்னை அமைதிப்படுத்தவே மனிதர்கள் அழைப்பார்கள். ஆனால் பேசுவதற்கு எனக்கு உண்மையிலேயே யாருமில்லை. நான் என்றென்றும் ஓர் அனாதிதான் என்ற எனது சாபத்தை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *