சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது – அடுத்து சிக்கப் போவது யார்?

Spread the love

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக்காசு’ கொடுக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். மார்க்கெட் விலையை விட பிரபுமணி குறைந்த விலைக்கு தங்க காசுக்களை கொடுப்பதாகக் கூறியதால் ராஜனும் தங்க காசுக்களை அவரிடம் வாங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரபுமணி கூறிய தங்கக் காசு முதலீடு திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை ராஜன் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், சொன்னபடி தங்கக்காசுக்களை தராமல் ஏமாற்றவே, ராஜன் சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு பிரபுமணியை கைது செய்தனர்.

 தங்ககட்டிகள்

தங்ககட்டிகள்
file photo – கோப்புப் படம்

அவரிடம் நடத்திய விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி என்பவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த மோசடிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கூறியிருக்கிறார். ஆனால் கிடைத்த ஆதாரங்கள், ஏற்கெனவே கைதான பிரபுமணி அளித்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியை கைது செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *