சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் கொடூர சம்பவத்திற்கு எதிராக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைந்திருக்கிறது காவல்துறை. விரைவில் நீதிமன்றக் காவலில் எடுத்து மணிகண்டன் விசாரிக்கப்படவுள்ள நிலையில், மணிகண்டன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிப் பின்னணி குறித்து சேலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “மணிகண்டன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருந்தன. பல பெண்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
அந்த வீடியோக்களில் இருந்த பெண்களில் 32 வயது கொண்ட ஒரு பெண் நேரடியாக வந்து கொண்டலாம்பட்டி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் யாராகா இருந்தாலும் தைரியமாக வந்து புகார் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்” என்றார்.