India
oi-Halley Karthik
ராஞ்சி: தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜார்க்கண்டில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மூவர்ண கொடியை ஏந்தி மாணவர்கள் ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து பக்கம் பக்கமாக பேசிய ராகுல் காந்தி.. ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் குறித்து மௌனமாக இருப்பது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
நம்மூரில் டிஎன்பிஎஸ்சி மாதிரி, ஜார்கண்டில் ஜேபிஎஸ்சி மற்றும் ஜேஎஸ்எஸ்சி தேர்வாணையங்கள் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகின்றன. ஆனால், சமீப காலமாக இந்த ஆணையங்கள் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி
இரவு பகல் பாராமல் 21 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ராகுல் காந்தி இந்த விஷயத்தை பற்றி பெரியதாக பேசவில்லை. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக.. பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட்ட ராகுல் காந்தி.. ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டை முற்றுகையிடவில்லை என்றாலும் கூட.. அட்லீஸ்ட் மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கலாமே! ஆனால் அதை அவர் செய்யவில்லை.
மூவர்ண கொடி பேரணி
ஜார்க்கண்டில் தற்போது காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவேதான் ராகுல் காந்தி சைலண்ட் மோடில் இருக்கிறார் என்றும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மூவர்ண கொடி ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். இந்த ஊர்வலம் போராட்டத்தின் தீவிரத்தை அதிகரிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் வைக்கும் கோரிக்கைகள் இதுதான்.
கோரிக்கைகள் என்ன?
1. தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்
2. முறைகேடு புகார் எழுந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்
3. தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியே உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு மூலம் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
வழக்குப்பதிவு
இதைத்தான் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஜார்க்கண்ட் அரசு, தேர்வு முறைகேடுகள் விஷயத்தில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியிருக்கிறது என்றும், தேர்வாணையத்தின் முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியிருக்கிறார்கள் என்றும், மாநில சிறப்பு காவல்துறையினரால் விசாரணை நியாயமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறியிருக்கிறது.
காங்கிரஸ் மௌனம்
இது தவிர ஏற்கெனவே கடந்த 10ம் தேதி சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதாக கூறி அடையாளம் தெரியாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
சிபிஐ விசாரணையை ஏற்காதது, தேர்வுகளை முழுமையாக ரத்து செய்யாதது, 300 பேர் மீது FIR போட்டது.. இதெல்லாம் மாணவர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதற்கிடையில் ராகுல் காந்தியின் சைலண்ட்.. பாஜகவுக்கு பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது பாஜக கண்ணாக இருக்கிறது. இந்த நேரத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதை போல காங்கிரஸ் நடந்துக்கொள்ளக்கூடாது என்று பலரும் கூறுகின்றனர்.


