"'சொல்லாமலே' படத்தின் க்ளைமேக்ஸை மாத்தணும்னு ஆர்.பி. செளத்ரி சார்கிட்ட சொன்னப்போ.!" – இயக்குநர் சசி

Spread the love

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி, அவருடைய தங்கை மகன் அஜய் திஷான், ஸ்வாசிகா உள்ளிட்டோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்காக இயக்குநர் சசியை சினிமா விகடன் சேனலுக்காக நாம் பேட்டி கண்டோம்.

இந்த நேர்காணலில் அவர், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி உடனான நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார்.

நூறு சாமி
நூறு சாமி

இயக்குநர் சசி பேசுகையில், “‘சொல்லாமலே’ படத்தின் கிளைமேக்ஸில் முதலில் நாக்கை வெட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் கிடையாது. முதலில் வேறொரு கிளைமேக்ஸ்தான் எழுதியிருந்தேன்.

முதலில் முடிவு செய்து வைத்திருந்த கிளைமேக்ஸை வைத்தே நான் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய 15 நாளில் இந்த கிளைமேக்ஸ் ஐடியா எனக்கு ஸ்டிரைக் ஆனது.

கிளைமேக்ஸை இப்படி மாற்றினால், படம் நிச்சயமாகக் காலத்திற்கும் நிற்கும் என முடிவு செய்தேன். ஆனால், அதனை அமைப்பதற்கான திரைக்கதை என்னிடம் இல்லை. அதை எழுதுவதற்கான நேரமும் என்னிடம் இல்லை.

புரொடக்‌ஷன் மேலாளர் என்னிடம் படப்பிடிப்பிற்குக் கிளம்ப வேண்டும் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்போது நான் சௌத்ரி சாரைச் சந்தித்து, ‘கிளைமேக்ஸை மாற்ற வேண்டும்’ எனச் சொன்னேன்.

அப்போது அவர், ‘ஏன் மாற்ற வேண்டும்? இந்த கிளைமேக்ஸிற்காகத்தானே உனக்குச் சான்ஸ் கொடுத்தேன். இப்போது உனக்கே உன் கிளைமேக்ஸ் மீது நம்பிக்கை இல்லையென்றால் நான் எப்படிப் படத்தைத்தொடர்வது?’ என்றார்.

நான், ‘இல்லை சார், இந்த கிளைமேக்ஸ் இருந்தால் ஹிட் ஆகும். ஆனால், நான் எடுக்கப்போகும் கிளைமேக்ஸ் வைத்தால், படம் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆகும்,’ என்றேன்.

இயக்குநர் சசி
இயக்குநர் சசி

உடனடியாக அவர், ‘டைரக்டர் சொல்வதை வைத்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிட்டார். பிறகு படம் முடிந்த பிறகு அவர் படத்தைப் பார்த்தார். படத்தின் இறுதியில் ‘தயாரிப்பு – சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ என்கிற கார்ட்தான் வரும்.

நான் அப்போது அவரிடம், ‘இறுதியில் என்னுடைய பெயரும் வர வேண்டும்’ எனக் கேட்டேன். உடனடியாக அதற்கும் ஒப்புக் கொண்டார். அப்போது இயக்குநரின் பெயர் படத்தின் இறுதியில் வராது.

‘நான் இதைப் பற்றி அவரிடம் கேட்கப் போகிறேன்’ எனச் சொன்னதுமே அனைவரும், ‘வேண்டாம். அவர் டென்ஷனாகிவிடுவார்’ என்றார்கள். ஆனால், நான் கேட்டதும் அதற்கும் அவர் ஒப்புக் கொண்டார்,” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *