கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் முனைவோர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, “நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘டபுள் என்ஜின்’ அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. இதற்கு மாறாக தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தி.மு.க மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். அனைத்து மாநிலங்களிலும் 50 சதவிகிதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
அதில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வி அல்ல, நாட்டின் பெண்களின் தோல்வி. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை தி.மு.க மற்றும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் கிளப்புகின்றன. வளர்ச்சி இல்லாமல் நலத்திட்டங்கள் மட்டும் நீடிக்க முடியாது. ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை இணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் காவிரிக்கும் நீர் வழங்கும் வாய்ப்பு உருவாகும். கங்கா – காவேரி இணைப்பு, பிரதமர் மோடி ஆட்சி தொடரும் பட்சத்தில் நடக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து அரசுகளும் செயல்பட வேண்டும்” என்றார்.