டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

Spread the love

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற்று டாக்சி ஒன்று கல்யானிலிருந்து முர்பாட் நோக்கி சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதியது. இதில் டாக்சி மீது சிமென்ட் கலவை டேங்கர் விழுந்ததில் டாக்சி அப்படியே அப்பளம் போன்று நொறுங்கியது. இந்த விபத்தில் டாக்சியில் இருந்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீஸாரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

உள்ளூர் எம்.எல்.ஏ.கிஷன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இந்த விபத்தில் அஞ்சனா என்றவர் தன் 3 பிள்ளைகளை இழந்துள்ளார். அஞ்சனாவின் மகள்கள் நேகா(19), மான்சி(22), மகன் பிரதமேஷ்(15) ஆகியோர் முர்பாடில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்

உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்

ஏற்கனவே அஞ்சனாவின் கணவர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். இதனால் அஞ்சனா வீட்டு வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

இதே போன்று இந்த விபத்தில் கணபதி என்ற விவசாயியும் உயிரிழந்தார். கணபதி தனது மனைவிக்காக கல்யான் சென்று மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது. கணபதி குடும்பத்தில் அவர் மட்டும் தான் உழைத்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் இறந்துவிட்டதால் இனி அவரது குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8 பேர் ஆண்கள். மூன்று பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 6 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முர்பாட் துணை காவல் கண்காணிப்பாளர் அனில் லாட் கூறுகையில், “இரு வாகன ஓட்டுநர்களின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் டாக்சி டிரைவர் பிரசாந்த் செண்ட்னேவும் (21) ஒருவர். அதே வேளையில், சிமெண்ட் கலவை வாகனத்தின் ஓட்டுநர் தலைமறைவாக உள்ளார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்யான் மற்றும் முர்பாட் சாலையில் எப்போதும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *