International
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 80வது பிறந்தநாளை ஜூன் 14ஆம் தேதி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷல். காரணம், டிரம்ப் தனது பிறந்தநாளை சண்டையில் துவங்கி சண்டையில் முடித்துள்ளார்.

டிரம்பின் 80வது பிறந்தநாளில் அமைதி ஒப்பந்தம்
டிரம்ப்-ன் பிறந்த நாளில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்தத்தில் நான்கு மாதங்களாக நீடித்த மோதலுக்கு இந்த ஒப்பந்தம் உடனடி முடிவு கட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 80வது பிறந்தநாளில் இந்த அமைதி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் தரப்பு இந்த ஒப்பந்தத்தை தனது நாட்டு நேரப்படி ஜூன் 15 அன்று இறுதி செய்தது. இதன் மூலம், இந்த வரலாற்று நிகழ்வு டிரம்பின் பிறந்தநாளில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அமைதி ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில், தனது 80வது பிறந்தநாளை டிரம்ப் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நடைபெற்ற UFC போட்டியுடன் கொண்டாடினார். இந்த நிகழ்வில் பிரபலங்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை தொடர்ந்து டின்னர், இதர கொண்டாட்டங்களும் இருந்தது.

அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்
இந்த அமெரிக்க – ஈரான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின்படி, அனைத்து முனைகளிலும் உடனடியாக போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லெபனானில் நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்பட்டு, அமெரிக்கா விதித்த கடற்படை முடக்கமும் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணை எதிர்காலத்தில் “நிரந்தரமாக கட்டணமில்லா” வழித்தடமாக இருக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

தீர்க்கப்படாத பிரச்சனைகள்
இந்த ஒப்பந்தம் போரை நிறுத்தியிருந்தாலும், அடுத்த 60 நாட்களுக்கான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் முரண்பாடு ஏற்படும் வாய்ப்புகளை கொண்டுள்ளன. அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் ஈரான் தரப்பு, எதிர்கால செறிவூற்றல் தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெறும் என்றும், ஏவுகணை திட்டம் இந்த விவாதத்தில் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முடக்கப்பட்ட ஈரான் நிதிகளை விடுவிப்பது மற்றும் எண்ணெய் தடைகளை நீக்குவது குறித்தும் இரு தரப்பு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்த அமைதி ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், உலகளாவிய எண்ணெய் விலை உறுதிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் எவ்வாறு உடன்பாட்டுக்கு வருகின்றன என்பதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.