அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஈரான் அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டுவிழ்த்தியது. இதனால் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
அப்படி இருந்தும் இரு நாடுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று அறிவிக்கப்பட இருந்தது.
ஆனால் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஜூன் 14 அன்று ஈரானில் அந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுவதை விரும்பவில்லை.
ஏனெனில், அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாள் ஆகும். எனவே 14ம் தேதி கடந்த பிறகு, அதாவது நள்ளிரவு கடந்த பின்னரே அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியது. எனவே ஈரானில் அந்த ஒப்பந்தம் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதே சமயம், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே சுமார் 7.5 மணி நேர கால வித்தியாசம் இருந்ததால், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது அமெரிக்காவில் அப்போது ஜூன் 14-ஆம் தேதியாகவே இருந்தது. இதன் மூலம் இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தேதியைப் பெற்றுக்கொண்டனர்.
இதனால், அமெரிக்காவில் இந்த ஒப்பந்தத்தைத் தனது பிறந்தநாள் சாதனையாக டிரம்ப் முன்னிறுத்த முடிந்த அதே வேளையில், ஈரானால் தனது நாட்டில் அவரது பிறந்தநாளன்று அதில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடுவதைத் தவிர்க்க முடிந்தது.
ஜூன் 14 அன்று அதாவது தனது பிறந்தநாளன்று ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டிரம்ப் பல நாட்களாகவே பகிரங்கமாகக் கூறிவந்தார். பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அன்றைய தினமே மின்னணு முறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.