சிவகங்கை சீமையின் ‘செட்டிநாடு’ என அழைக்கப்படும் காரைக்குடி தொகுதியில் இப்போது கொண்டாட்ட வாணவேடிக்கைகள் அதிர்கின்றன.
காரணம், 1952-ல் தொடங்கி இன்றுவரை பல தேர்தல்களைக் கண்ட காரைக்குடிக்கு, முதல்முறையாக ஒரு ‘அமைச்சர்’ அந்தஸ்து கிடைத்திருக்கிறது!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார் 42 வயது பல் மருத்துவர் டி.கே.பிரபு.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு தொகுதிகள் இருந்தாலும், காரைக்குடிக்கு மட்டும் இத்தனை காலமும் ‘அமைச்சர் யோகம்’ எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை துரை. கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம். தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள். குடும்பமே அரசியலில் ஊறியிருந்தாலும், பிரபுவுக்கு இது ஒரு ‘மெகா ஜாக்பாட்’ தான்!
தற்போது தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பிரபு, இள ரத்தமாக அமைச்சரவைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.