கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதிப்பதற்காக, கோவையில் நாளை பா.ஜ.க.வின் மத்தியக் குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நாம் ஒரு தோல்வியைச் சந்தித்திருந்தாலும், பா.ஜ.க மிகுந்த உற்சாகத்தோடு மீண்டும் எழுந்து வரும். ஏனெனில், இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் யாரும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் புதிய ஆட்சியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தி.மு.க அரசு ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டது என்பதை இந்த புதிய அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் மத்திய அரசுடன் ஒரு மோதல் போக்கையே கடைப்பிடித்தார்கள். உலகத் தமிழர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆணைமேடு செப்புப் பட்டயங்கள்’ குறித்து தமிழக முதலமைச்சர், பிரதமருக்குத் தனது நன்றியையோ பாராட்டையோ தெரிவித்திருக்க வேண்டும். ஏனெனில், இதன் மூலம் பிரதமர் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். எனவே, இது போன்ற பாரபட்சமான மனநிலையை புதிய அரசு கைவிட வேண்டும்.
கல்வி அமைச்சர் பேசும்போது, இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது தங்களின் கொள்கை முடிவு என்று கூறுகிறார். புதிய அமைச்சர்கள் எடுத்தவுடனே பொத்தாம் பொதுவாகக் கொள்கை முடிவுகளை எடுக்காமல், நிதானமாகச் சிந்தித்து மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவை பலன் தருமோ, அந்தத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நான் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். புதுச்சேரி போன்ற இடங்களில் பி.எம் ஸ்ரீ திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறப்பாகச் செயலாற்றப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சரின் அறை என்பது மிகவும் மரியாதைக்குரிய ஒரு இடமாகும். நேற்று முதலமைச்சர் தனது அறையில் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, அங்கு ‘ரீல்ஸ்’ எடுக்கப்பட்ட நிகழ்வு மிகவும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் அறையில் இது போன்ற தேவையற்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதில், அவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
717 ஒயின் ஷாப்களை மூடுவதாக அரசு கூறுகிறது. ஆனால், இதற்கான சரியான திட்டம் அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எந்தெந்தக் கடைகள், எப்போது மூடப்படும் என்ற கணக்கெடுப்பை முழுமையாக மக்களுக்குத் தெரிவிக்காததால், இன்று காலையிலேயே நான்கு இடங்களில் மக்கள் மறியல் செய்துள்ளனர். மற்றொருபுறம், மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நடைமுறைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ‘கூடுதலாக 10 ரூபாய் வாங்கவில்லை என்றால், எங்களுக்கான பிற உதவிகளை அரசு விரிவுபடுத்த வேண்டும்’ என்று கூறி டாஸ்மாக் ஊழியர்களே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நிர்ணயித்த விலையை விடப் பல இடங்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது.
கடந்த அரசு, தேர்தலுக்கு முந்தைய நாள் அவசர அவசரமாக 1,500 மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அதில் 300 பேருக்குப் பணியாணைக் கொடுத்துள்ளது. இப்போது மீதமுள்ளவர்கள் தங்களுக்குப் பணியாணை கோரிச் செல்லும்போது, காவல்துறை மூலம் அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. நேற்று சுகாதாரத் துறையுடன் நடத்திய கூட்டத்தில் முதலமைச்சர் இந்த விவகாரத்தை ஆராய்ந்தாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அம்மா உணவகங்களைச் சீரமைப்பது நல்ல முயற்சி என்றாலும், டாஸ்மாக் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விவரமாகப் பார்த்துச் செயல்பட வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடனே சிங்கப்படை வேலை செய்யும் என்று கூறினார்கள். ஆனால், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சட்டம் ஒழுங்கு ஏன் முறையாகச் செயல்முறைப்படுத்தப்படவில்லை? அதேபோல், சில அரசு டெண்டர்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு உடனே மூடப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அந்த மாற்றத்திற்கான முயற்சிகளை உண்மையிலேயே மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியில் நடந்த குறைபாடுகளைக் கணக்கெடுத்துச் சரி செய்யாவிட்டால் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்படும். `தவறு செய்ய நினைத்தால் அதை இப்போதே இரேஸ் செய்துவிடுங்கள்’ என்று முதலமைச்சர் தனது முதல் பேச்சில் அதிகாரிகளுக்குக் கூறினார். ஆனால், இன்னும் எதுவும் மாறவில்லை. எனவே, முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.