தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 17 அன்று 244 பேருக்குக் கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறை தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் 16,830 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பருவமழைக்கு முன்பே பரவல் அதிகரித்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் தடுப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். தேங்கிய நீர், கழிவுகளை அகற்றுதல், கொசு மருந்து மற்றும் புகை அடித்தல், நிலவேம்புக் குடிநீர் விநியோகம் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.