பாரதிதாசனுக்கு கிடைத்த நி(நீ)தி….ஓரே நாளில் 24 லட்சம் அனுப்பிய அரசு! – Kumudam

Spread the love

மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பாரதிதாசன், உதவித்தொகை கிடைக்காமல் தனது படிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி அண்மையில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகை கோரி வருவதாகவும், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மாணவரின் கோரிக்கை தொடர்பாக சமூகநீதித் துறை விளக்கம் அளித்தது. மாணவர் வெளியிட்ட தகவல்களில் சில உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

மேலும், மாணவர் ஆராய்ச்சி மெட்டீரியல் உள்ளிட்ட செலவுகளுக்கான முறையான பில்களை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், அவரது படிப்பு பாதிக்காமல் இருக்க நிதி வழங்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று ஒரே நாளில் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஏற்கெனவே ரூ.12.21 லட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்ட தொகையுடன் இரண்டாம் ஆண்டுக்கான மொத்தம் ரூ.36 லட்சம் நிதி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, மாணவரின் ஆராய்ச்சி செலவுகள் மற்றும் வாழ்வியல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவரது வெளிநாட்டு ஆராய்ச்சி படிப்பு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மாணவருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏன் முதலில் செய்யவில்லை என்றும்,படிக்கின்ற மாணவனின் மனநிலையை புண்படுத்திய பிறகு இந்த அரசு நிதியை வழங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *