திருவண்ணாமலை மாவட்டத்திலும் அப்படித்தான், போளூர் அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஆரணியில் போட்டியிட்ட ஜெயசுதாவுக்காக வேலை பார்த்தார்கள். எங்கள் வேட்பாளரைக் கைவிட்டார்கள். அதை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ள்வில்லை. அதுமட்டுமல்ல, 2016,21 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு, 2026 தேர்தலில் திலகபாமா வெறும் 8500 வாக்குகள் வாங்கினார்.
அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் எங்கே போனது. ஜெயலலிதா கட்சித் தலைமையாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா, எடப்பாடி பழனிசாமி ஆளுமையில்லாத தலைவராக இருப்பதால்தான் நிர்வாகிகள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இப்போது நடக்கின்ற இடைத்தேர்தல் யாருக்கு வாழ்வா, சாவா போராட்டம் எங்களுக்கா, அ.தி.மு.கவுக்கா?..,அவர்களுக்குத்தான் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஆனால், முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஏனோதானோவென நடந்துகொள்கிறார்கள்.

காரணம், எடப்பாடி பழனிசாமி தாராபுரத்தில் வெற்றிபெற்றால் போதும் என நினைக்கிறார். மதுராந்தகத்தை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவர் இறங்கிவந்து எங்களிடம் ஆதரவு கேட்கவும் தயாராக இல்லை.நாங்களாக ஆதரவு தெரிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். நாங்கள் ஏன் இறங்கிப்போக வேண்டும். பொருளாதார ரீதியான விஷயங்கள்தான் காரணம் என ஒருசிலர் விமர்சிக்கிறார்கள். 2026 தேர்தலில் அவர் எங்களுக்கு சரியான அளவில் கைகொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்தத் தேர்தலில் எங்களுக்கு அப்படியொரு தேவை இல்லை. தங்கள் கட்சி நிர்வாகிகளைக்கூட அனுசரித்துச் செல்ல மறுப்பவர், ஆளுமை இல்லாத ஒருவருடன் கூட்டணி வைப்பதால் பா.ம.கவுக்கு அரசியல் ரீதியாக என்ன லாபம் என்கிற கண்ணோட்டத்திலும் எங்களின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டும்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது”‘ என்கிறார்கள்.
அ.தி.மு.க வட்டாரத்தில் பேசும்போது,
“எங்களோடுதான் கூட்டணியில் இருந்தார்கள். தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, த.வெ.கவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கவே இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.