டேஞ்சரான கட்டத்தை அடைந்தது சீன ராணுவம்.. இனி இந்தியா 1 நொடி கூட கண்ணை சிமிட்ட கூடாது! | How will China’s PLA Modernisation be a big blow to India safety?

Spread the love

International

oi-Shyamsundar I

பெய்ஜிங்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தொடங்கப்பட்டு 99 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டைக் கொண்டாடவுள்ள சீன ராணுவம், அதற்குள் உலகத்தரம் வாய்ந்த நவீன ராணுவமாக உயர இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதில் சீன ராணுவத்திற்குள் மூன்று மிகப்பெரிய சிக்கல்கள் நீடிக்கின்றன.

China PLA military modernization

சீன ராணுவத்திற்குள் இருக்கும் 3 முக்கிய பிரச்சனைகள்

நவீன காலப் போருக்குத் தேவையான இன்டலிஜென்டைசேஷன் எனப்படும் ஏஐ மற்றும் அல்காரிதம் தொழில்நுட்பங்களை ராணுவத்தில் முழுமையாக இணைப்பதில் தாமதம் நிலவுகிறது. ராணுவ அதிகாரிகளிடையே காணப்படும் லஞ்சம், ஊழல் மற்றும் சிறப்புச் சலுகை எதிர்பார்க்கும் அதிகார தோரணை இன்னும் குறைந்தபாடில்லை.

இதுவரை ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்திய சீனாவால், போர்க்களத்தில் உண்மையிலேயே பயன்படும் தரமான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை.

இதோடு, அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் சீனா மீது விதித்து வரும் தொழில்நுட்பத் தடைகளும், சீன பாதுகாப்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் சீனாவிற்குப் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்துள்ளன.

2027 இலக்கு என்ன? போர் உடனடியாக வருமா?

2027-ஆம் ஆண்டு என்பது தைவான் மீது சீனா போர் தொடுக்கும் அபாயம் உள்ளது. 2049க்குள் அமெரிக்காவிற்கு நிகரான உலகத் தரம் வாய்ந்த வல்லரசு ராணுவமாக மாறுவது என்ற இரண்டு பெரிய இலக்கை சீனா வைத்துள்ளது. இதற்கான பணிகளை சீனா செய்து வருகிறது. இதை கண் சிமிட்டாமல் உற்றுநோக்க வேண்டிய, கவனமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஏனென்றால் தைவான் மீது சீனா போர் தொடுத்தால்.. அதில் வென்றால் ஆசியாவில் சீனா மிகப்பெரிய பவராக உருவெடுக்கும். அது இந்தியாவிற்கு சிக்கலாகும்.

முக்கியமாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தொடங்கப்பட்டு 99 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டைக் கொண்டாடவுள்ள சீன ராணுவம், அதற்குள் உலகத்தரம் வாய்ந்த நவீன ராணுவமாக உயர இலக்கு நிர்ணயித்துள்ளது

கடந்த சில வருடங்களாக சீனா அடைந்து வரும் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சி, உலக அரங்கில் அதை ஒரு வல்லரசாக மாற்றி வருகிறது. ஆனால், ஒரு பக்கத்து நாடாக சீனா அடையும் இந்த அதிவேக வளர்ச்சி, இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் செல்வாக்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.

எல்லைப் பாதுகாப்பு

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே சுமார் 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதி தெளிவற்ற நிலையில் உள்ளது. 2020-ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, எல்லையில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

சீனா தனது ராணுவத்தை அதிநவீனப்படுத்தி வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து புதிய கிராமங்களையும், ராணுவத் தளங்களையும் உருவாக்கி வருகிறது. சீனாவின் ராணுவப் பலம் அதிகரிக்கும் போது, இந்திய எல்லையில் எப்போதும் ஒரு போர்ச் சூழல் அல்லது பதற்றம் நீடித்துக் கொண்டே இருக்கும்.

ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ்: இந்தியாவைச் சுற்றி வளைக்கும் ‘முத்து மாலை’ திட்டம்

தெற்காசியாவில் இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்கைக் குறைக்க சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து, துறைமுகங்களையும் உள்கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் வழியாகச் செல்லும் CPEC திட்டம் மற்றும் கவாடர் துறைமுகம் இந்தியாவிற்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய ஒன்று.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியாவின் தெற்கு கடற்பகுதியை மிக அருகிலிருந்து கண்காணிக்க சீனாவிற்கு இது உதவுகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்ளும் சீனாவின் ‘ஸ்ட்ரிங் ஆஃப் பேர்ல்ஸ்’ உத்தி, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது.

பொருளாதார ஆதிக்கம்

இந்தியச் சந்தையில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் மிக அதிகம். மின்னணு சாதனங்கள், மருந்துக் மூலப்பொருட்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் என பல முக்கியமான துறைகளுக்கு இந்தியா சீனாவையே பெருமளவில் நம்பியுள்ளது.

இந்த அதிகப்படியான இறக்குமதி காரணமாக, இந்தியா சீனாவிற்கு இடையே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. சீனா தனது பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி, இந்திய உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை மறைமுகமாகக் கட்டுப்படுத்த முயற்சிப்பது இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்பாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறுவதை சீனா தொடர்ந்து தடுத்து வருகிறது. மேலும், அணுசக்தி விநியோகக் குழுவில் (NSG) இந்தியா இணைவதையும், பயங்கரவாத அமைப்புகள் மீது சர்வதேசத் தடை விதிப்பதையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தாமதப்படுத்தி வருகிறது.

சீனாவின் இந்த வளர்ச்சி வெறும் எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல; அது இந்தியாவின் எதிர்கால உலக வல்லரசு கனவிற்கும், இறையாண்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். எல்லா பக்கத்தில் இருந்தும் சீனா இந்தியாவிற்கு செக் வைத்து வரும் நிலையில்.. இதை இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *