‘All India Professional Congress’ என்ற ஒரு அமைப்பை ராகுல் தொடங்கினார். அதாவது டாக்டர், அறிவியலாளர், தொழிலதிபர் என வேறு வேறு துறைகளில் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கும் நபர்களை ஒரே புள்ளியில் இணைக்கும் அமைப்பு இது. இப்படியொரு அமைப்பை உருவாக்கி கட்சியை வலுப்படுத்தலாம் என்பது ராகுலின் ஐடியா. இந்த அமைப்பின் தலைவராக சசி தரூர் செயல்பட்டு வந்தார். 2023 இல் அவரை நீக்கிவிட்டு அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு ராகுலின் அறிவுறுத்தலோடு பிரவீன் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். இதெல்லாம் கட்சிக்குள் ராகுலுக்கு எந்தளவுக்கு நெருக்கமாக பிரவீன் இருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.

களத்திலிருந்து வந்த காங்கிரஸ்க்காரர் என்பதாலோ நிர்வாகிகளின் ஆதரவோ தொண்டர்களின் ஆதரவோ பிரவீனுக்கு இல்லாமல் இருந்தது. இதனாலயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயன்றும் அந்த ஆசை பிரவீனுக்கு கைகூடவில்லை. திமுக தரப்பிலிருந்தும் தன்னுடைய விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள் என பிரவீன் நினைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் உண்டு.
இந்நிலையில்தான் 2026 தேர்தலை நோக்கி முன்னேறுகையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் முதல் வெடிகுண்டை பிரவீன் வீசினார். விஜய்யை ஒரு எதிரியே இல்லையென திமுக கட்டமைத்து வந்த நிலையில், விஜய் ஒரு வலுவான போட்டியாளர் அவருக்கு பெரிய வாக்கு வங்கி இருக்கிறதென பிரவீன் சக்கரவர்த்தி தரவுகளை பகிர்ந்து பொதுவெளியில் பேச ஆரம்பித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி அது அவருடைய தனிப்பட்ட கருத்து என கடந்து போனது. ஆனாலும் அவர் ஓயவில்லை. திமுகவுடன் கூட்டணி பேச கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு திமுக தலைவரை சந்தித்த இரண்டே நாளில் பிரவீன் போய் விஜய்யை சந்தித்து வந்தார்.