தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

Spread the love

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நடித்த விளம்பரம் தொடர்ந்து அனைத்து வகையான மீடியாக்களிலும் வந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தற்போது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாநிலம் முழுவதும் கலப்படம், உணவகங்களில் சுத்தம் போன்றவற்றை உறுதி செய்ய தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது.

பல முன்னணி உணவகங்கள் சரியாக சுத்தத்தை பின்பற்றவில்லை என்றும், காலாவதியான உணவுப்பொருள்களை வைத்திருந்ததாகவும் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது விமல் எலைச்சி பான் மசாலாவில் நடித்ததற்காக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அந்த நோட்டீஸில் விமல் எலைச்சி பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை உடனே நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளக்கம் அளிக்க 15 நாள் கெடு

அதோடு அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இருந்து விளம்பரம் தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கத்தை அகற்றவும் இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நடிகர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது போன்று பான் மசாலா மற்றும் குட்கா விளம்பரங்களில் நடித்ததாக பாலிவுட் நடிகர்கள் மீது விமர்சனம் வந்தது. அப்போது அவர்கள் உற்பத்தியை நிறுத்தவேண்டியதுதானே என்றும், இது எங்கள் தொழில் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *