Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு இரண்டும், தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று சொல்லியும் கூட.. கர்நாடகா நமக்கான நீரை திறக்கவில்லை. இப்படி இருக்கையில்.. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
இன்று நேற்று கிடையாது.. இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால், நூற்றாண்டுக்கு முன்னர் காவிரி கிளை ஆற்றின் நடுவே அணைகளை கட்டிக்கொண்டு, டெல்டா விவசாயத்தை கர்நாடக மாநிலம் தடுத்துள்ளது. அன்று முதல் இன்று வரை காவிரி நீருக்காக சண்டை செய்துக்கொண்டிருக்கிறோம்.

இப்படி இருக்கையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர் பார்த்த அளவுக்கு பெய்யாததால்.. கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில அரசு உறுதியாக சொல்லிவிட்டது.
காவிரி நீர் உத்தரவு
ஆனால், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இருக்கிறது. அப்படி இருந்தும் மாநில அரசு தண்ணீர் திறக்க மறுத்துள்ளது. இந்த விஷயத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு கொண்டு சொன்றபோது.. வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தினமும் 1 டிஎம்சி என.. 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டது. இதையெல்லாம் கேட்கிற ஆளா கர்நாடகா?
மதிக்காத கர்நாடகா
எந்த உத்தரவையும் கர்நாடகா காதில் வாங்கவில்லை. நிலைமை இப்படி இருக்கையில்.. கர்நாடகாவின் கேஎஸ்ஆர் அணை மற்றும் கபினி அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக.. அணைகளின் நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. எனவே வேறு வழியின்றி தண்ணீரை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடாக ஆளானது.
நீதிமன்ற நெருக்கடி
இது தவிர, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.. அப்படி வந்தால், கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி வரும். இதையெல்லாம் தவிர்க்கவே கேஎஸ்ஆர் அணையிலிருந்த வினாடிக்கு 12,000 கனஅடியும், கபினியிலிருந்து 3000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூரில் மேஜிக்
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,385 கனஅடியிலிருந்து வினாடிக்கு 6,179 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 80.93 அடியிலிருந்து 81.31 அடியாக அதிகரித்திருக்கிறது. எனவே குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கனஅடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர் இருப்பு தற்போது 42.27 டிஎம்சி ஆக இருக்கிறது. மேட்டூர் அணை 90 அடி மற்றும் அணையின் நீர் இருப்பு 60 டிஎம்சிஐ எட்ட வேண்டும். அப்போதுதான் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஏன் 90 அடி வேண்டும்?
மேட்டூர் அணை ரொம்பவும் பெருசு. அதனால.. தண்ணீ கம்மியா இருந்தாலே திறக்கலாமே! என்று தோன்றலாம். அப்படி செய்ய முடியாது. காரணம், 90 அடிக்கு தண்ணீர் உயரும்போதுதான்.. அழுத்தம் சரியாக இருக்கும். 70-80 அடியில் தண்ணீர் திறந்தால்.. காவிரியின் கடைகோடி பகுதியான திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் போய் சேராது. மட்டுமல்லாது குறுவை சாகுபடிக்கு 60-90 நாட்களுக்கு தண்ணீர் தேவை. அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழே இருக்கும்போது தண்ணீர் திறந்தால்.. சீக்கிரமாகவே தண்ணீரை நிறுத்த வேண்டி வரும். எனுவே லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகிவிடும். எனவேதான் 90 அடி விதி பின்பற்றப்படுகிறது.


