மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
அந்த விமானம் வி.எஸ்.ஆர்.வென்சர் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும். விபத்துக்கு அந்த நிறுவனம்தான் காரணம் என்று அஜித்பவார் உறவினரான எம்.எல்.ஏ.ரோஹித் பவார் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இப்போது அதே நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் அஜித்பவார் மகன் பார்த் பவார் தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த் பவார் வி.எஸ்.ஆர்.வென்சர் நிறுவனத்திற்குச் சொந்தமான தனி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்றுள்ளார்.

அந்த விமானத்தில் பார்த் பவாருடன் வேறு நான்கு பேரும் பயணம் செய்தனர். இது குறித்து சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பார்த் பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சரத் பவார் இல்லத்திற்குச் செல்வதற்காக, மும்பையிலிருந்து புனேவிற்கு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் எனது அலுவலகத்திற்கு அறிவுறுத்தியிருந்தேன்.
கடைசி நேரத்தில் விமானம் முன்பதிவு செய்யப்பட்டதால், எனது பணியாளர்கள் தவறுதலாக VSR-க்குச் சொந்தமான ஒரு விமானத்தை முன்பதிவு செய்துவிட்டனர். நான் அந்த விமானத்திற்குச் செல்லும் வரை அது VSR-க்குச் சொந்தமானது என்பது எனக்குத் தெரியாது. இது நிர்வாக தவறு,” என்று பார்த்த் எழுதியிருந்தார்.
மேலும் டிக்கெட் முன்பதிவு ஏஜென்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாகவும், இதுபோன்ற கவனக்குறைவுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அதில் தெரிவித்தார்.
அந்த விமான நிறுவனத்தைப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“நான் VSR-க்கு எதிரானவன். அந்த நிலைப்பாடு தொடரும். உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையை உருவாக்க முயல்வது துரதிர்ஷ்டவசமானது,” என்று அவர் மேலும் கூறினார்.