தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள் \ Children refused to visit father—who had raised them single-handedly—when he passed away in an old age home

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்த்தார்.

இந்தூரில் மிதிவண்டி டயர் மற்றும் டியூப் விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிலை நடத்தி வந்த அவர், ஒரு சாதாரண வீட்டில் இருந்து கொண்டு தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

நான்கு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள் நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக வசிக்கின்றனர்.

ஆனால் கன்ஷ்யாம் தனது வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளை, குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் இன்றி போபாலில் உள்ள “அப்னா கர்’ எனும் முதியோர் இல்லத்தில் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறப்புச் சான்றிதழை மட்டும் அனுப்புங்கள்

கடந்த 4-ஆம் தேதி கன்ஷ்யாம் இறந்துபோனார். முதியோர் இல்லத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, போபாலுக்கு வருமாறு அவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் வருவதற்குச் சாக்குப்போக்குகள் கூறினர்.

அவர்கள் எப்படியும் தந்தையைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் உடலை இரண்டு நாட்கள் அடக்கம் செய்யாமல் வைத்திருந்தனர். ஆனால் நான்கு பிள்ளைகளில் யாரும் வரவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு, அவரது உடலைத் தகனம் செய்துவிட்டு, இறப்புச் சான்றிதழை மட்டும் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதியோர் இல்லத்தினரிடம் பிள்ளைகள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து அப்னா கர் முதியோர் இல்லத்தை நடத்தும் மாதுரி மிஸ்ரா கூறுகையில், “அவரது மனைவி இறந்தபோது, ​​அவரது இளைய மகளுக்கு வயது இரண்டுதான். ஒரு காலத்தில் ஒரு தந்தையால் தனியாக மனைவி இல்லாமல் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளை வளர்க்க முடிந்தது. ஆனால் இன்றோ, நான்கு குழந்தைகள் சேர்ந்து ஒரு தந்தையைக் கூடக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. கன்ஷ்யாம் தனது சொத்துக்களை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *