அதிருப்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெற முடியாது. எம்.பி.க்களை பணத்தால் கவர்ந்திழுக்க பா.ஜ.க முயற்சிக்கிறது, ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்,” என்று அவர் கூறினார்.
மற்றொரு புறம் அதிருப்தி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேயும் தயாராகி வருகிறார். 18-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாட்டீல் அஷ்திகர், ஓம்ராஜே நிம்பல்கர், பௌசாஹேப் வக்சௌரே மற்றும் சஞ்சய் ஜாதவ் ஆகியோர் தற்போது ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருக்கினர்.
இன்னும் ஒரு எம்.பி. ஆதரவு கிடைத்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்காக ராஜபாவ் வாஜேயுடன் ஏக்நாத் ஷிண்டே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உத்தவ் சேனா அதிருப்தி எம்பிக்கள் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை டெல்லியில் உள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் டெல்லி இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஸ்ரீகாந்த், ஷிண்டே ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஆவார். அதிருப்தி எம்.பி.க்கள் இன்று மீண்டும் ஷிண்டேயைச் சந்தித்துப் பேச இருக்கின்றனர். இதற்கிடையே உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்காக சஞ்சய் ராவுத், அர்விந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
எப்படியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர தேவையான எம்.பி.க்களைப் பெற இது போன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.க இறங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.