Tamilnadu
oi-Vignesh Selvaraj
தஞ்சை: ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்காததால் தஞ்சையில் 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அணைக்கு வினாடிக்கு 97 கனஅடி நீர் வரும் நிலையில், வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழையும் போதிய அளவு கைகொடுக்காத நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடிக்கும் கீழ் குறைந்து குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி கர்நாடகா ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 32 டிஎம்சி தண்ணீரையும் திறக்க வேண்டும். எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களும், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் விவசாயத்துக்கு காவிரி நீரையே நம்பி இருக்கின்றன. இந்நிலையில் மேட்டூரில் நீர் திறக்கப்படாததால் விவசாயிகள் குறுவை சாகுபடி பொய்த்துப்போய் வேதனை அடைந்துள்ளனர்.
இனி, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். குறுவை பொய்த்தாலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.