‘தமிழகத்திலிருந்து தான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது’- தொல்லியல் துறை சி. சுதாகர்! | “It was from Tamil Nadu that the electoral system spread across the world” — C. Sudhakar, Department of Archaeology.

Spread the love

இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்னராட்சி உருவாக்கப்பட்டது. தலைவர்களின் சுகபோகங்களுக்கு முக்கியத்துவம் தரும் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிகள் வெடிக்கவே மக்களாட்சி தோன்றியது. மக்களாட்சியைக் குறிக்கும் இந்தியாவின் முக்கியமான உத்திரமேரூர் மற்றும் மானூர் கல்வெட்டு குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் தொழில்நுட்பத்துறை மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த சி.சுதாகர் நம்மிடம் பேசத் தொடங்கினார்,

உத்திரமேரூர் கல்வெட்டு

உத்திரமேரூர் கல்வெட்டு

“மக்களாட்சியின் பிறப்பிடமான கிரேக்கத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் வேட்பாளர்களைக் குறிக்கும் தாமிரத்தகடுகள் மற்றும் கூழாங்கற்களைத் தாழிகளில் இட்டும் தேர்தலை நடத்தியுள்ளனர். மேலும் உடைந்த பானையோடுகளில் வேட்பாளர்களின் பெயரைக் கீறியும், தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். இருப்பினும் உலகெங்கும் மன்னராட்சியே நடந்தது. பின்னர் சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் ஐஸ்லாந்தில் மக்களாட்சி உருவானது. அப்போது மொத்த தமிழகத்தையும் பாராந்தகச் சோழன் ஆண்டு வந்தான். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மாமன்னன் ராஜராஜன் பிறந்தான். ஐஸ்லாந்து மக்களாட்சிக்கும் பின்னர் சுமார் 900 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் 1788-லும், சுவிட்சர்லாந்தில் 1848-லும் மக்களாட்சி உருவானது. பின்னர் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி மலர்ந்தது. ஆனால், அங்கெல்லாம் கிரேக்கம் போல் மக்கள் வாக்குகளைச் செலுத்தவில்லை. கையைத் தூக்கி, குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்து தேர்தல் நடந்தது. இவ்வாறு வாக்களிப்பதால் பொதுமக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். முதன் முதலில் 1856 ஆம் ஆண்டில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.

மானூர் கல்வெட்டு

மானூர் கல்வெட்டு

இதில் பல நன்மைகள் இருந்ததால் உலகெங்கும் ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு நீண்ட வரலாற்றினை இந்தத் தேர்தல் முறைகள் பெற்றிருந்தாலும் 1230 ஆண்டுகளுக்கு முன்பே கிராம சபைகளில் குடவோலை முறையில் தேர்தல் நடந்துள்ளது. அப்போது காகிதம் புழக்கத்தில் இல்லாததால் பனை ஓலையைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு நடந்த தேர்தல் பற்றி மானூர் அம்பலவாணசுவாமி கோவில் மண்டபத்தூணில் உள்ள கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (கிபி 768-815) 35ஆம் ஆட்சி ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்வெட்டு வேட்பாளர்களின் தகுதிகளைக் கூறுகிறது:

1. வேட்பாளர்களின் (35-70) வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. கல்வியில் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

3. உழைத்த சம்பாதித்து அரசுக்கு வரி கட்டுபவராக மட்டுமில்லாமல், வேட்பாளர்களிடம் அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும்.

4. அதோடு திறமைசாலியாகவும், நல்லொழுக்கம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

5. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த அரசுப் பணியிலும் இருந்திருக்கக் கூடாது.

வேட்பாளராக நிற்பதற்கு தகுதியற்றவர்கள்:

1. அரசு பணத்தில் ஊர் வேலைகளைச் செய்து முடித்து கணக்கு காட்டாமல் இருப்பவர்கள்.

2. லஞ்சம் பெற்றவர்கள்

3. பெரும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள்.

4. இவர்களின் தாய் மற்றும் தந்தை வழி சொந்தங்களும் இந்தப் போட்டியில் பங்குகொள்ள முடியாது.

 சி.சுதாகர்

சி.சுதாகர்

என இந்த கல்வெட்டு விளக்குகிறது. சட்டம் அன்றைய காலங்களில் எவ்வளவு கடுமையாக இருந்திருக்கிறது என்று இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உத்திரமேரூரில் திருமால் கோயிலின் சுவரில் இதே போல் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு தமிழகம் எங்கும் ஆண்ட முதலாம் பாராந்தகச் சோழன் (கிபி 97-95) காலத்தில் நிறுவப்பட்டது. மானூர் கல்வெட்டுக்கும் 123 ஆண்டுகளுக்குப் பிறகு இது நிறுவப்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஐஸ்லாந்தில் மக்களாட்சி மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உத்திரமேரூர் கல்வெட்டு தற்காலத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் தெரிந்தவர்கள் இதனை சற்று சிரத்தை எடுத்தால் படித்துவிடலாம். இது தற்காலத் தமிழைவிட முற்றிலும் மாறுபட்டது. இதனை பொதுமக்கள் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. முறையாக வட்டெழுத்தைப் படித்தவர்களால் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

உத்திரமேரூர் கடல்வெட்டு தலைநகரான சென்னையில் இருப்பதாலும், தமிழ் எழுத்தில் இருப்பதாலும் அனேகரின் கவனத்தை ஈர்த்துள்ளது மாறாக மானூர் தமிழகத்தின் தென்கோடியில் இருப்பதாலும், படிக்க கடினமான வட்டெழுத்தில் இருப்பதாலும் இது அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் இந்த இரண்டு கல்வெட்டுகளும் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை என்பதில் எந்த ஐயமுமில்லை . அதே வேளையில் ஓட்டுச் சீட்டு முறையில் முதன்முதலில் தேர்தல் எங்கு நடந்தது என்று கேட்டால் 1230 ஆண்டுகளுக்கு முன்பே திருநெல்வேலியில் நடந்திருக்கிறது என்று பெருமையாக நாம் சொல்லலாம்.

கிரேக்க நகரமான ஏதேன்ஸ்க்கும் எகிப்திற்கும் இடையே சுமார் 1100 கிலோமீட்டர் தூரம்தான் உள்ளது. அப்போது கிரேக்கர்களின் தாக்கம் எகிப்திலும் அதிகமாகவே இருந்தது. தமிழர்கள் தங்கள் பயணத்தின்போது கிடைத்த பயனுள்ள தகவல்களையும், பழக்கங்களையும் தமிழகத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் குடவோலை தேர்தல் முறை திருநெல்வேலிக்குள் வந்ததா என்ற கேள்வியும் எழவே செய்கிறது அதே வேளையில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய தமிழர்களின் நாகரிக எச்சங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது எதிர்காலத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடவோலை தேர்தல்முறை இருந்தது என்று நிரூபிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஒரு கண்டுபிடிப்பு வந்தால் சிறப்பான தேர்தல் முறை தமிழகத்திலிருந்து உலகமெங்கும் சென்றது என்று கூறலாம். அதுவரை கிரேக்கமே மக்களாட்சியின் தாயகம் என்ற பட்டத்தை பெற்று நிற்கும்” என்று விளக்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *