தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை… என்ன செய்யப்போகிறது அரசு?

Spread the love

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு. இரண்டு இலக்க விகிதத்தில் வளர்ச்சியை எட்டும் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இத்தனை பெருமிதங்கள் இருந்தும், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற செய்தி மிகவும் கவலையளிக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த ‘விக்சித் பாரத்’ நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 14 சதவிகிதமாக அதிகரித்திருப்பதையும், இது தேசிய சராசரியான 9.9 சதவிகிதத்தைவிட மிக அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ்.மகேந்திர தேவ்.

இந்தியாவில் அதிக தொழில்மயமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (GCC) எனப் பல துறைகளில் தொடர்ந்து முதலீடுகள் குவிகின்றன. இருந்தும், தமிழ்நாட்டில் வேலையின்மை ஏன் அதிகமாக இருக்கிறது?

உண்மையில் வேலைகள் நிறைய இருக்கின்றன. பல நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் கிடைப்பதில்லை என்கின்றன. ஆனால், பட்டதாரிகள் தங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்கிறார்கள். இந்த முரண்பாடே வேலையின்மை பிரச்னையின் மையம். ஒரு பிரிவினர் எந்த வேலை கிடைத்தாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற, நிலையான வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். இங்கே தொழில்துறைக்குத் தேவையான திறன்களுக்கும் கல்லூரிகள் உருவாக்கும் திறன்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகியிருக்கிறது.

எனவே, வேலையின்மைக்குத் தீர்வு காண்பதென்பது, தகுதியான வேலைகளையும், தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடனான மனிதவளத்தையும் உருவாக்குவதே ஆகும். கல்வி, திறன் மேம்பாடு, தொழில்துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்படாதவரை இந்த முரண்பாடு நீடிக்கவே செய்யும்.

2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்ற இலக்கை அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். முந்தைய அரசு, 1 ட்ரில்லியன் டாலரை இலக்கு வைத்து செயல்பட்டது. இலக்குகளை நிர்ணயிப்பதைவிட, அதை அடைவதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதே முக்கியமானது. நம் கையிலிருக்கிற வலுவான மனிதவளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

1.5 ட்ரில்லியன் டாலர் என்ற கனவுப் பொருளாதார இலக்கை எட்டுவது நீண்ட நெடும் பயணம். முதலீடுகள், மனிதவளம், தொழில்துறை மூன்றையும் இணைத்து தீர்க்கமான திட்டங்களை உருவாக்குவதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும். அந்தக் கனவை எட்டும் திருநாளுக்காக ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறது!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *