Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: மின்சாரம் கணக்கெடுக்கும் ஊழியர்களின் பணியை எளிதாக்கும் வகையிலும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் புதிய முடிவினை எடுத்துள்ளது. இதன்படி மின்சாரம் கணக்கெடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. ஊழியர்கள் தங்களின் செல்போன் செயலியை பயன்படுத்தி துல்லியமாக மின்சாரத்தை கணக்கெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை மின்வார வாரியம் வழங்கி உள்ளது,
தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணிக்கை 2.40 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் விவசாய மின் இணைப்புகளும் உள்ளன. இவை அனைத்துக்கும் மின்வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் அரசால் வழங்கப்படுகிறது. மின் நுகர்வோர்கள் குறித்த முறையான டேட்டாவை பெறும் வகையில், மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முறைகேடுகள் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.மின்சாரம் கணக்கீடு என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. 60 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு மின் வாரியத்தால் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த சூழலில் மின்சாரம் கணக்கெடுக்கும் மின்வாரிய ஊழியர்களின் பணியை எளிதாக்கும் வகையில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கலை நடக்கப்போகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மின்சாரம் கணக்கெடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில், மின்சார வாரியப் பணிகள் பலவும் செயலி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே ஊழியர்கள் தங்களின் செல்போன் செயலியை பயன்படுத்தி துல்லியமாக மின்சாரத்தை கணக்கெடுக்க வேண்டும் என்பதற்காக 10 ஆயிரம் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதுடன், தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக சிறப்பு ‘போஸ்ட் பெய்ட் சி.யு.ஜி சிம் கார்டு’களும் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிதியுதவியானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது. ஒருமுறை இந்த தொகையைப் பெற்றுக்கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் இந்த வசதியை பெறுவார்கள். அதாவது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த செல்போன் நிதியுதவி ஊழியர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 500 பேர் மின்சார கணக்கீட்டாளராக பணிபுரிகிறார்கள். பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

