`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' – உ.வாசுகி

Spread the love

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்து வரும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக கைதுசெய்துள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசத்தை, கல்வித்துறையை பாதுகாக்கின்ற வகையில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீது வழக்கு பதிவு செய்தல் கூடாது. மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முறையில் தீர்க்க வேண்டும்.

உ.வாசுகி

மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும், காவல்துறை அராஜகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் மோடி அரசு கையாளும் விதம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இல்லை. தேர்வு முகமையை கலைத்துவிட்டு, மாநில அரசாங்கங்கள் பொறுப்பில் அவற்றை விட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். உயர்கல்வி துறையின் மோசமான நடவடிக்கைகள் மாணவர்களை போராடும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வி அதிகாரத்தை ஒன்றிய அரசின் கைகளில் குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது காவல்துறையினர் நடந்து கொண்ட முறை சரியல்ல என்று சொல்லி இருக்கிறார். அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், அவர் தலைமையிலான தமிழக காவல்துறை, சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை சரியானதா என்பதை அவர் உணர வேண்டும். மாணவர்களை கைது செய்வதும், அவர்களை போராடாதே என்று சொல்வதற்கும் தமிழக காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது. தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளுக்கு தமிழக முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சாலைகள் என்பது போராடுவதற்கான இடம் அல்ல என்கிறார். ஆனால், முந்தைய ஆட்சியாளர்களும், தற்போதைய ஆட்சியாளர்களும், போராடுவதற்கான இடங்களே இல்லாமல் செய்து விட்டனர். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் அமர்ந்து போராடுவதற்கான ஒரு இடத்தை, அனுமதியை சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஒதுக்கி தர வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில், திமுக கொண்டு வந்த திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, புதிதாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தது. முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களை அழைத்து பேசி முடிவெடுக்காமல் இவ்வாறு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. எனவே அனைத்து கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும். மேகதாது அணை கட்டுவது என்பது தமிழக நலனுக்கு ஏற்புடையதல்ல. அதனை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

உ.வாசுகி

நெல் கொள்முதல் என்பது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள் காரணமாக, விவசாயிகளுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்படுவதில்லை. நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடிய கிடங்கு வசதிகள் இல்லாமலும், 18 லட்சம் சாக்கு மூட்டைகள் சேதமடைந்த தகவலும் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சிரத்தை அற்ற செயல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எல்நினோ பருவநிலை மாற்றம் என்பது, சாதாரண பொதுமக்கள், விவசாயிகள் மீது எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு அரசு முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மிகப் பெரிய போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். நாடாளுமன்றத்துக்கு முன்பு பெண்கள் அமைப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *