தமிழக பட்ஜெட் தாக்கல்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மரிய வில்சன்! – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்து ஜுன் மாதம் 18 ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீதான விவாதம் ஜு 19, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில்  நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு,  உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது குறித்து வருகின்ற 22 ம் தேதி முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தவெக அரசு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய வில்சன்  தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 16 நாட்களாக முதலமைச்சர் விஜய் எல்லா துறை ரீதியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் செலவிட்டு ஆலோசனை நடத்தி உள்ளார்.

நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம். தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த 55 நாட்களாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறை ரீதியாக நாங்கள் பார்த்து கொண்டு தான் வருகிறோம். சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்கும் போது நீங்களும் வரவேற்பு தெரிவியுங்கள். சந்தோஷமாக இருப்போம்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சி 6 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை, பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, தி.மு.. தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.

தமிழகத்தில் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் ஊழலுக்கு எதிராக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களில் பதவி பறிக்கப்படும் என்றும் தவெகவின் அமைச்சர்கள் ரீல்ஸ் எடுக்கும் நோக்கில் எந்த செயலை செய்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது மக்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்றும் பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *